தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: பட்டியலிட்டு பழனிசாமி விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: பட்டியலிட்டு பழனிசாமி விமர்சனம்
ADDED : டிச 08, 2025 05:28 AM

சென்னை: 'சட்டம் - ஒழுங்கு சீர்கேடால், தமிழகத்தின் வளர்ச்சி சீர் கெட்டுள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றிருப்பதை, கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே உணர்த்துகின்றன. கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் இடையிலான மோதலில், பிளஸ் 2 மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் எடை தராசால் அடித்து, காய்கறி கடைக்காரர் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசியில் சொத்து தகராறில், விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
சேலம், தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை, போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் பட்டப்பகலில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழி மறித்து திருட முயற்சி நடந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக வரும் செய்திகள், கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.
பள்ளி மாணவர்கள் இடையே, படிப்புதான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில், வன்முறை போக்குதான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்த தவறியதற்கு, ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும்.
விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே; எந்த நேரத்திலும், துளி கூட பாதுகாப்பு இல்லாத அவலத்தின் மொத்த உருவமான ஆட்சியைத்தான், ஸ்டாலின் நடத்தி வருகிறார். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதால், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது.
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வர் ஸ்டாலின் இதை எப்போது உணரப் போகிறாரோ? ஆட்சியில் இருக்கப்போகும் நான்கு மாதங்களிலாவது, சட்டம் - ஒழுங்கில் தி.மு.க., அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

