பள்ளிகளில் 'ப' வடிவ இருக்கையில் பாதகமான அம்சங்களும் உள்ளன: அரசுக்கு தலைவர்கள் எச்சரிக்கை
பள்ளிகளில் 'ப' வடிவ இருக்கையில் பாதகமான அம்சங்களும் உள்ளன: அரசுக்கு தலைவர்கள் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 14, 2025 06:38 AM
ADDED : ஜூலை 14, 2025 01:35 AM

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில், 'ப' வடிவில் மாணவர்கள் இருக்கையை அமைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்ட நிலையில், இவ்வாறு இருக்கை அமைப்பதில், பாதகமான அம்சங்களும் உள்ளன என, அரசியல் தலைவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் விபரம்:
பா.ம.க., தலைவர் அன்புமணி: 'வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள், 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் சாதகமான அம்சம் இருப்பதை போல், பாதகமான அம்சங்களும் உள்ளன. பெரும்பாலான வகுப்பறைகள், 20 அடி நீளம், 20 அடி அகலம் கொண்டவையாக உள்ளன. இவற்றில், 'ப' வடிவில் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்.
இருபுறமும் அமரும் மாணவர்கள், கரும்பலகையை பார்த்து எழுத, கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும். இதனால் கழுத்து வலி ஏற்படும். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க, ஆசிரியர்களும், வகுப்பறைகளும் அடிப்படை தேவை.
எனவே, அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்ட வேண்டும். ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்.
முன்னாள் கவர்னர் தமிழிசை: தமிழக கிராமப்புற பள்ளிகளில், கட்டடம், கழிப்பறை, போதுமான ஆசிரியர்கள் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. தமிழக அரசு, இவற்றை முதலில் சரிசெய்ய வேண்டும்.
மாணவர்களை 'ப' வடிவில் அமர வைக்கும்போது, அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு, மருத்துவ ரீதியாக உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கேரள சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பதை விட்டு விட்டு, அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க., -- ஐ.டி., அணி பதிவு: 'ப' வடிவத்தில், பள்ளிகளில் பெஞ்சுகளை வைத்தால், கடைசி பெஞ்ச் ஒழிந்து விடுமாம். இது, ஸ்டாலின் அரசின் கண்டுபிடிப்பு. உங்கள் 'லாஜிக்'படியே பார்த்தாலும், 'ப' வடிவத்தில் வைத்தால், எல்லா பெஞ்சும் கடைசி பெஞ்சுதானே.
இந்த வடிவத்தால், இடது, வலது பக்கம் உட்காரும் மாணவர்களுக்கு, கழுத்து வலி, கண் வலி ஏற்படும் என்ற அடிப்படை அறிவுகூட அரசுக்கு இல்லையா.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.