வாழ்வதற்கு பொருள் வேண்டும்; வாழ்வதிலும் பொருள் வேண்டும்
வாழ்வதற்கு பொருள் வேண்டும்; வாழ்வதிலும் பொருள் வேண்டும்
UPDATED : ஜன 17, 2024 11:00 AM
ADDED : ஜன 17, 2024 12:25 AM

உலகின் தொன்மை மிகுந்த தமிழில், இல்லாத இலக்கியங்களே இல்லை. அதில் திருக்குறள், 'தேன்' போன்றது. இது ஒரு புதையல்; வாழ்வியல் களஞ்சியம். தமிழில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான இலக்கியங்களுள் திருக்குறள், உலக மக்களுக்கு ஓர் அடையாளம். அத்தனை தத்துவங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழர்கள், ஒருமுறையாவது திருக்குறளை முழுமையாக படிக்க வேண்டும்.
நம் அடையாளத்தை இழந்து விட்டு வாழ்வது ஒரு வாழ்க்கை அல்ல. இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என, ஐந்து கலவைகள் கொண்ட பிரபஞ்சம்.
ஒன்றை விலக்கினாலும் உலகமே இல்லாமல் போய்விடும். இந்த பஞ்சபூதங்களைத் தான் வள்ளுவர், பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். வள்ளுவரின் கருத்துகளில் ஆங்காங்கே அறிவியல் கருத்துகளும் கொட்டிக் கிடக்கின்றன.
பள்ளி பருவத்தில் வினாக்களுக்காக திருக்குறள் படிப்பது அல்ல, வாழ்க்கை. முழுக்க முழுக்க வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் நுாலை, எப்போதும் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். தான் அதில் கற்றதை, உணர்ந்ததை, இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அவ்வாறுதான் நான் கிட்டத்தட்ட, 50 ஆண்டுகள் தினமும் ஒரு குறள், அதன் விளக்கமும் எழுதி, 12 சுற்றுகள் தொடர்ந்து எழுதி நிறைவு செய்துள்ளேன். என் தந்தையின் இறந்த நாளில் கூட, திருக்குறள் விளக்கம் எழுத தவறவில்லை.
வாழ்வதிலும் பொருள் வேண்டும்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். வாழ்வதற்கு பொருள் வேண்டும்; ஆனால் வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும். பொருளற்ற வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? திருக்குறள் என்பது மனித வாழ்வின் கலங்கரை விளக்கம். நம் சுவாசத்தில் இருக்க வேண்டிய முக்கியமான அங்கம்.
திருக்குறள் படிக்கும் பொழுது, 10 உடைமைகளை வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். இருக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்று அடையாளப்படுத்துகிறார்.
பத்து உடைமைகளில் முதலாவதாக அன்புடைமை. தொடர்ந்து, அடக்கமுடைமை, ஒழுக்கம் உடைமை, பொறுமையுடமை, கருணை உடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை (தைரியம்), முயற்சி உடைமை, நாணம் உடைமை (வெட்கம்), பண்புடைமை என, 10 உடைமைகளை சுட்டிக்காட்டுகிறார். இந்த சமூகம் பயன்பெற, திருக்குறளில் ஏராளமான கருத்துகள் கொட்டி கிடக்கின்றன. இது நமக்கொரு மடை மாற்றமாக அமையும்.
ஆனால், அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் திருக்குறள் முன்னிறுத்தப்படுவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. மாணவர்களை உருவாக்கும் வலிமையான, வல்லமையான அற்புதமான ஒரு ஆயுதம், ஆசிரியர் பணி. ஆசிரியரானவர்கள் ஒருமுறையேனும் திருக்குறளை முழுமையாக வாசிக்க வேண்டும். அதிலிருக்கும் அறக்கருத்துக்களை மாணவர் மனதில் வித்திட வேண்டும்.
மூன்று மட்டுமே
உலகில், கிட்டத்தட்ட 6,000 மொழிகள் இருப்பதாக பதிவு. அதில், பேச்சு வழக்கொழிந்து இல்லாமல் போன மொழிகள் பல்லாயிரம். உலகில் செம்மொழிகள் என, 10 இடங்கள் ஒதுக்கப்பட்டால், அதில் தமிழ், சமஸ்கிருதம், சீன, கிரேக்கம் மொழி உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
இதில், 11 வகையான தத்துவங்களை, கோட்பாடுகளை கொண்டது தான், உலகின் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் இருக்க முடியும். தொன்மை மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், அரேபிய, சீன மொழி, தமிழ் மொழிகள் வருகின்றன.
தமிழில் திருக்குறள், 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. 3,000 ஆண்டுகளுக்கு முன், திருமூலர் எழுதிய திருமந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது.
இன்னமும் நமது மூதாதையரை சொல்லும் பொழுது, இலக்கண நுால் தொல்காப்பியம் நமக்கு கிடைக்கிறது. 5,000 ஆண்டுகள் என்று சொல்லக்கூடிய இலக்கியங்கள் எல்லாம் நம்மிடம் இருக்கிறது. மொழி அழிந்தால் அதன் இனமே அழிந்து விடும்.
நம் பாரம்பரியம் போய்விடும். எந்த சூழலிலும் நம் மொழியை நாம் தவற விட்டு விடக்கூடாது; வரலாற்றுப் பிழை நேரிட அனுமதிக்கக் கூடாது!

