ADDED : பிப் 02, 2024 06:28 AM

சென்னை : சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின், ஏழாவது நாள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
அதில் சிதம்பரம், மயிலாடுதுறை நிர்வாகிகள் பங்கேற்றனர். அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர்.
அப்போது, சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வினர் கூறியதாவது: சிதம்பரம் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட்டால் நன்றாக இருக்கும். எந்தவித வேற்றுமைக்கும் இடமளிக்காமல், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டாலும் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மயிலாடுதுறை தொகுதி நிர்வாகிகள் கூறியதாவது: மயிலாடுதுறை தொகுதி வெற்றிக்காக, உழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் விரும்பி கேட்டாலும் கொடுக்கக் கூடாது. தி.மு.க., தான் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

