பன்னீருக்கு சாபம் விட்ட வைகோ: நடந்ததை சொல்கிறார் மல்லை சத்யா
பன்னீருக்கு சாபம் விட்ட வைகோ: நடந்ததை சொல்கிறார் மல்லை சத்யா
ADDED : நவ 10, 2025 02:36 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டிய நிலையில், உண்மையில் நடந்தது என்ன என, ம.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா விளக்கி உள்ளார்.
'கடந்த 2011 சட்டசபை தேர்தலில், சீட் தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், பன்னீர்செல்வம் தவறான தகவல்களை கூறினார். அதற்கான பலனை, தற்போது அவர் அனுபவிக்கிறார்' என, வைகோ குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், 'சீட்' விவகாரத்தில் 'இது தான் நடந்தது' என்ற தலைப்பில் மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கை :
கடந்த 2011 தேர்தலில், வைகோவிடம் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வரவிருந்த நிலையில், ஏழு தொகுதிகள் தான் தர முடியும் என, முதல் நாளில் இருவரும் தெரிவித்தனர். மறுநாள் இருவரும் வைகோவை சந்தித்து, 'எண்ணிக்கையை மாற்றி சொல்லி விட்டோம், ம.தி.மு.க.,வுக்கு, 6 தொகுதிகள் தான் தர முடியும்' என, கண்ணீர் மல்க கூறினர்.
அதற்கு வைகோ, 'நீங்கள் என்ன செய்ய முடியும். கட்சித் தலைமை சொல்வதைத்தானே சொல்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை' எனக் கூறினார்.
இதற்கிடையில், இ.கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் தலைமையில், சில கட்சி தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து, 'வைகோவை கூட்டணியில் தக்கவைக்க வேண்டும்' என சொல்ல, விஜயகாந்தும் வைகோவிடம் பேச முயற்சித்தார். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போது செய்தியாளர்கள் கேட்டபோது, 'திருப்பதி செல்லும் வழியில், மரத்தடியில் தயிர் சாதம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்' என, வைகோ பதில் அளித்தார்.
'விஜய்காந்த் சந்திக்க விரும்புகிறார்' என, வைகோவிடம் நான் கூறியபோது, 'நேற்று கட்சி துவக்கிய நடிகரிடம், நான் பேச வேண்டுமா, நாம் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்' என, என்னிடம் வைகோ கூறினார்.
பின் ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், தாயகத்தில் அதிகாலை வரை நடந்தது. இரவு முழுதும் காத்திருந்த பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர், 12 தொகுதிகள் தர, ஜெயலலிதா சம்மதித்து விட்டார் என கூறினார்கள்.
ஆனால், அதை ஏற்க வைகோ மறுத்தார். அப்போது, பன்னீர்செல்வம் என்னிடம் 'சத்யா உங்கள் மொபைல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்யாமல் இருங்கள். காலையில் ஜெயலலிதாவிடம் பேசி விட்டு, நல்ல முடிவை சொல்கிறோம்' என்றார்.
உடனே வைகோ கோபமடைந்து, 'மிஸ்டர் பன்னீர்செல்வம், நான் தான் கட்சியின் பொதுச்செயலர். உங்கள் தலைமை சொன்னதை என்னிடம் சொல்லி விட்டீர்கள். நீங்கள் போகலாம்' எனக்கூறி, என் மொபைல்போனை வாங்கி, அவர்கள் முன்னிலையில் 'சுவிட்ச் ஆப்' செய்தார்.
பின், ம.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை, அப்போதைய மாவட்டச்செயலர் வேளச்சேரி மணிமாறன் வாயிலாக, ஜெயலலிதாவுக்கு அனுப்பினார் வைகோ.
அந்த தீர்மானத்தில், அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்திய பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோருடன், அப்போது வந்த டாக்டர் வெங்கடேஷ் பெயரையும் இணைத்து வைகோ எழுதியது, ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அதற்கு பின், 'சூரியன் உதிக்கும்: இலை கருகும்' என, நாஞ்சில் சம்பத்தை விட்டு பேச வைத்து, தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அறிவிக்க வைத்தார் வைகோ.
இவ்வாறு மல்லை சத்யா கூறியுள்ளார்
- நமது நிருபர் -:.

