போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்ட்? மாநில அரசை உஷார்படுத்தும் உளவுத்துறை
போராட்டத்தில் ஊடுருவிய மாவோயிஸ்ட்? மாநில அரசை உஷார்படுத்தும் உளவுத்துறை
UPDATED : டிச 31, 2024 08:23 AM
ADDED : டிச 31, 2024 05:14 AM

சென்னை அண்ணா பல்கலை வளாகத்துக்குள், மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், பெண் உரிமை இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அம்பேத்கர்- ஈ.வெ.ராமசாமி படிப்பு வட்டத்தை சார்ந்த மாணவர் அமைப்பு, சமூக நலனுக்கான மாணவர் எழுச்சி இயக்கம் போன்ற அமைப்புகளும், இந்த விஷயத்தில் அனைத்து கல்லுாரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து, மாநில அளவில் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இப்பல்கலையில் தொடர்ச்சியாக, இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், பல்கலையில் பணியாற்றும் சிலர் உடந்தையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். கூடவே, இந்த விவகாரங்களை ஏற்கனவே நன்கு அறிந்திருந்தும், அரசும், போலீசும் மூடி மறைக்க பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுபோன்ற உயர் கல்வி நிறுவனங்களில், முனைவர் பட்டம் பெறுவதற்காக படிக்கும் மாணவியருக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர்.
கடந்த அக்டோபரில், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது, கவர்னர் ரவியிடம் பி.எச்.டி., மாணவர் ஒருவர், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலையில் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து புகார் மனு அளித்தார். இதுபோன்று, தமிழகத்தின் வேறு சில பல்கலையிலும் துன்புறுத்தல்கள் நடப்பதாக, மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தோர் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இந்த விவகாரம் வேறு திசை நோக்கி பயணிப்பதாக, மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் கண்காணிப்பில் கிடைத்த தகவல் என, மத்திய உள்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதில், 'அண்ணா பல்கலை விவகாரத்தில் நடக்கும் போராட்டத்தில், நகர்ப்புற மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனர்.
'போராட்டங்களை தீவிரப்படுத்த ரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதனால், மாநில அரசு இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.
- நமது நிருபர் -