தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., அதிருப்தி; நிர்வாகிகளுடன் வைகோ இன்று ஆலோசனை
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., அதிருப்தி; நிர்வாகிகளுடன் வைகோ இன்று ஆலோசனை
ADDED : மார் 11, 2026 06:23 AM

- நமது நிருபர் -
தி.மு.க., கூடுதல் தொகுதிகள் வழங்க முன்வராததால், கூட்டணியிலிருந்து வெளியேறலாமா அல்லது தொடரலாமா என, ம.தி.மு.க., நிர்வாகிகளுடன் வைகோ இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வென்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ம.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்ற மல்லை சத்யா, 'திராவிட வெற்றி கழகம்' என்ற கட்சியை துவக்கி உள்ளார்.
சொந்த சின்னம்
இதனால், வரும் தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் கொடுத்த தொகுதிகளை தர மறுப்பதுடன், ராஜ்யசபா சீட்டும் தராததால், வைகோ அதிருப்தி அடைந்தார். அவரது மகன் துரையின் ஆதரவாளர்கள், 'தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ராசிபுரத்தை சேர்ந்த ஜோதிபாசு, 'தே.மு.தி.க.,விடம் தி.மு.க., உடன்பாடு செய்ததே ம.தி.மு.க.,வை வெளியேற்ற தான்.
தி.மு.க., கூட்டணியில், மூன்று அல்லது நான்கு 'சீட்' வாங்கி எம்.எல்.ஏ., ஆவதை விட, துரை மத்திய அமைச்சர் ஆவதற்கான கூட்டணி முயற்சியை எடுக்க வேண்டும். அதுதான் ம.தி.மு.க.,வின் எதிர்கால வளர்ச்சிக்கு சரியாக இருக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.
அவசர கூட்டம்
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க., செயலர் பசும்பொன் மனோகரன், தனியார் 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில், 'ம.தி.மு.க.,விற்கு 12 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இல்லாவிட்டால், உடனே மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி அனைவரையும் பேச வைத்து, அப்போது எடுக்கும் முடிவை வைகோ அறிவிக்க வேண்டும்' என்றார்.
இந்நிலையில், ம.தி.மு.க., அவசர உயர்நிலைக்குழுக் கூட்டம், இன்று காலை 11:00 மணிக்கு, கட்சி அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் தலைமையில், சென்னையில் உள்ள ம.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடக்கும் என வைகோ அறிவித்து உள்ளார். இக்கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

