பன்னீர்செல்வம் இணைப்பு நிகழ்ச்சி புறக்கணித்த அமைச்சர் பெரியசாமி
பன்னீர்செல்வம் இணைப்பு நிகழ்ச்சி புறக்கணித்த அமைச்சர் பெரியசாமி
ADDED : மார் 01, 2026 04:19 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்த நிகழ்வை, மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி புறக்கணித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் ஒற்றை தலைமையை எதிர்த்ததால், அக்கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வந்த அவர், நேற்று முன்தினம் தி.மு.க.,வில் இணைந்தார்.
முக்குலத்தோர் ஓட்டு அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கிய பின், தென் மாவட்டங்களில் தி.மு.க.,வின் செல்வாக்கு குறைந்தது. அதனால், 'நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்கள் தொல்லை' என, கருணாநிதி விமர்சித்தார்.
தேனி மாவட்டத்தில், தி.மு.க.,வுக்கு செல்வாக்கான நிர்வாகிகள் இல்லை. அதனால், அ,தி.மு.க.,வில் பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அரசியல் செய்த தங்கதமிழ்ச்செல்வனை தி.மு.க.,வில் சேர்த்தனர். அவர் தற்போது எம்.பி.,யாக உள்ளார்.
மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் இணைந்ததால், தேனி மட்டுமல்லாது, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் கிடைக்கும் என, முதல்வர் ஸ்டாலின் நம்புவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், முதல்வராக இருந்தவர் என்பதால், பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க., தலைமை முக்கியத்துவம் கொடுக்கும். அமைதியாக பேசியே ஸ்டாலினிடம் காரியத்தை சாதித்து விடுவார் பன்னீர்.
விரும்பவில்லை எனவே, தங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என, தி.மு.க.,வில் காலங்காலமாக உள்ள முக்குலத்தோர் சமுதாய தலைவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் பன்னீர்செல்வம் வருகையை விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் பெரியசாமி பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்பியுள்ளார். அதன்படி, அவருக்கு அழைப்பு விடப்பட்டது.
ஆனால், பெரியசாமி வருவதாக கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பன்னீர்செல்வம் இணைப்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார்.
-- நமது நிருபர் --

