ADDED : பிப் 15, 2026 01:47 AM

பிப்., 13 வெள்ளியன்று, டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்து பணியை துவங்கினார் பிரதமர் மோடி. இத்துடன், 'கர்த்தவ்ய பவன்' 1, 2 ஆகிய அரசு அலுவலக கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
'சேவா தீர்த்' எனப்படும் பிரதமர் அலுவலகம், 13ம் தேதி திறக்கப்பட்டதற்கு பா.ஜ.,வில் ஒரு சுவாரஸ்யமான தகவல் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் விஜய ஏகாதசி. அதிலென்ன விசேஷம்? பகவான் ராமருடன் இந்த விஜய ஏகாதசி தொடர்பு உள்ளது.
இந்த நாளில் தான், ராமர் விரதம் இருந்து இலங்கையிலிருந்து சீதையை மீட்க கடலை தாண்டினார். இதனால் தான் இந்த நாளை தேர்ந்தெடுத்தாராம் மோடி. '2047ல், 'விக்சித் பாரத்' என்ற தன் கனவு திட்டம் நிறைவேறி, பாரதம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பதால் தான், விஜய ஏகாதசி அன்று திறந்து வைத்தார்' என்கின்றனர்.
'ராமர் கோவிலை கட்டுவோம் என சொன்ன மோடி, அதை நிறைவேற்றி விட்டார். ராமர் மீது அதீத பக்தி கொண்டவர். அதனால் தான், விஜய ஏகாதசி நாளை தேர்ந்தெடுத்தார்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.
'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தில், மத்திய அரசின் அனைத்து அலுவலகங்கள், பார்லி., என, அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை, 2019ல் துவக்கி வைத்தார் மோடி. ஆனால், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, 2021ல் கட்டட வேலைகள் ஆரம்பித்தன.
இதுவரை சவுத் பிளாக்கில் செயல்பட்ட பிரதமர் அலுவலகம், இனி, சேவா தீர்த்தில் இயங்கும். இத்துடன், அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும், கேபினட் செகரெட்ரியேட், தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் அலுவலகங்களும், இந்த அதிநவீன கட்டடத்திலிருந்து செயல்படும். நிதி அமைச்சகம், ராணுவம் உட்பட பல முக்கிய துறைகளின் அலுவலகங்கள், கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2லிருந்து இயங்கும்.

