எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா; தே.மு.தி.க., பிரேமலதா பூரிப்பு
எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா; தே.மு.தி.க., பிரேமலதா பூரிப்பு
ADDED : ஆக 12, 2025 04:31 AM

ஓமலுார்: ''அரசியலில் எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், தன் சமூக வலைதள பக்கத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா படத்தை சேர்த்து பதிவிட்டுள்ளார். இது, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு நாள் பயணமாக சேலம் சென்ற தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவிடம், இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
'அரசியல் ஆளுமை' என்ற விருதை தனியார் நிறுவனம் எனக்கு வழங்கியது. அப்போது, 'தமிழகத்தில் ஆளுமைகளாக இரண்டு பொதுச்செயலர்கள். ஒருவர் ஜெயலலிதா; மற்றொருவர் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா' என கூறினர். இந்த கருத்தையடுத்து, என் படமும், ஜெயலலிதா படமும் இணைந்து இணையத்தில் பரவி வருகிறது. அதை, சுதீஷ் பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆரை மானசீக குருவாக விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார். 'அரசியலில் எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா' என பலமுறை கூறியுள்ளேன்.
ஒரு எம்.ஜி.ஆர்., ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு பிரேமலதா தான்; யாருடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்புக்காக, தமிழகம் முழுதும் வரும் 23 வரை சுற்றுப்பயணம் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.