நாகேந்திரன் - திருமாவளவன்.சந்திப்பு தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு
நாகேந்திரன் - திருமாவளவன்.சந்திப்பு தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு
ADDED : மே 24, 2025 11:10 PM

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை, திடுமென சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திருமாவளவன் வெளியிட, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கட்சி சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தனர்.
அங்கு ஏற்கனவே, விமான பயணத்துக்காக காத்திருந்த திருமாவளவன், நயினார் நாகேந்திரன் மற்றும் முருகனை சந்தித்துப் பேசினார்.
அப்போது, நயினார் நாகேந்திரனுக்கு துண்டு அணிவித்து, வாழ்த்து தெரிவித்ததோடு, தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். பின், மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன், திருமாவளவன் ஆகிய மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திருமாவளவன், சமூக வலைதள பக்கங்களில் பதிவிட, தி.மு.க., கூட்டணியில் சர்ச்சையாகி உள்ளது.
பா.ஜ., கூட்டணியில் திருமாவளவன் சேர வேண்டும் என்று, அண்மையில் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், விமான நிலையத்தில் திருமாவும், நாகேந்திரனும் சந்தித்து பேசியிருப்பது, தி.மு.க., கூட்டணியில் பரபரப்பாக பேசப்படுகிறது.