நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: கண்ணீர் மல்க பேசிய சத்குரு
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: கண்ணீர் மல்க பேசிய சத்குரு
ADDED : ஆக 28, 2026 05:34 AM

தொண்டாமுத்துார்: நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் குறித்து, கண்ணீர் மல்க ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், கியிரோங் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமையில் கைலாய யாத்திரைக்கு சென்ற குழுவில், எஸ் 3 என்ற குழுவை சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் 80 பேர் சிக்கி கொண்டனர்.
இந்நிலையில், திபெத்தில் உள்ள தன்னார்வலர்கள் மத்தியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியதாவது: மிகுந்த மன வேதனையுடனும் வருத்தத்துடனும் திபெத் மற்றும் நேபாள எல்லை பகுதியில் ஏற்பட்ட கோரமான ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு குறித்த செய்தியை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்திய செய்தி அறிக்கைகளின் படி நேபாளப்பகுதியில், 484 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தப் பகுதியில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சாலைகளும் முடக்கப்பட்டுள்ளதால் எங்களால் அங்கே போக முடியவில்லை.
34 ஆண்கள், 46 பெண்கள் சாகாவிலும், மலையற்றத்தின்போதும், நாம் சந்தித்த நமது எஸ்3 குழுவை சேர்ந்த 80 பேர் அங்கு இருந்தனர். இதில், அமெரிக்காவில் இருந்து 22 பேர், கனடாவில் இருந்து 12 பேர், ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர், இங்கிலாந்தில் இருந்து 9 பேர், ஜெர்மனியில் இருந்து 4 பேர், பிரான்ஸ், நேபாளில் இருந்து தலா, 3 பேர், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஸ்பெயினை சேர்ந்த தலா, 2 பேர், பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், ரஷ்யா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 80 பேர் 34 ஆண்களும், 46 பெண்களும் இருந்தனர்.
இவர்களுடன் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கி இருந்த மூன்று தன்னார்வலர்களும், ஆசிரமத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு டாக்டரும் அந்த குழுவில் இருந்தனர்.
இதுவரை எவ்விதமான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும், எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும், ஏற்பட்டுள்ள அழிவின் அளவை பார்க்கும் போது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகத் தெரிகிறது.
நாம் ஒரு வாரத்திற்கு முன்பு குடியேற்ற சோதனைக்காக சென்றிருந்த அதே கட்டடம் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் ஒரு பகுதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், பிற விவரங்கள் எதையும் எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
துயர சம்பவம்
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளின் துாதரகங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். காலை 9:05 மணிக்கு, எங்களுடன் இருந்த குழு தலைவரான ஈஷாங்கா பிரவீனிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
அவர்கள், குடியேற்ற மையத்தை வந்தடைந்துவிட்டதாக செய்தி அனுப்பியிருந்தார். அதன் பிறகு 9:14 மணிக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரவீன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடன் முழு நேர தன்னார்வ தொண்டராக பணியாற்றி வருபவர். அவர் நேபாள எல்லையை கடந்திருந்தால், அவரது நேபாள தொலைபேசி எண் செயல்பட துவங்கியிருக்க வேண்டும். ஆனால் அது செயல்படவில்லை. எனவே அந்தக்குழு முழுவதும் அந்த கட்டடத்துக்குள்ளேயே இருந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது துரதிஷ்டவசமாக நிகழ்ந்துவிட்ட ஒரு கோரமான சம்பவமாகும்.
எங்களுடன் இருந்த நேபாள வழிகாட்டிகள் பலரும் அங்கே இருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம்.
நான் ஒரு குழுவினருடன் அங்கே செல்ல அனுமதி கிடைக்குமா என்று இந்திய துாதரகம், இந்தியாவில் உள்ள சீன துாதரகம் வாயிலாக அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அமெரிக்க துாதரகமும் இதற்காக முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு, கண்ணீர் மல்க சத்குரு பேசினார்.
