பன்றிகளுடன் ஒரு போதும் மல்லுக்கட்ட வேண்டாம்: பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் காங்கிரஸில் அதிர்ச்சி
பன்றிகளுடன் ஒரு போதும் மல்லுக்கட்ட வேண்டாம்: பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் காங்கிரஸில் அதிர்ச்சி
ADDED : டிச 09, 2025 06:11 AM

'பன்றிகளுடன் ஒரு போதும் மல்லுக்கட்ட வேண்டாம். நீங்கள் இருவரும் சேறாவீர்கள். ஆனால், பன்றி அதை விரும்பும்' என, ஜார்ஜ் பெர்னாட்ஷா தெரிவித்த தத்துவத்தை, காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார்.
பன்றிகள் என, அவர் சுட்டிக்காட்டியது யாரை என, தி.மு.க., கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியில் விவாதம் நடந்து வருகிறது.
த.வெ.க., தலைவர் விஜயை, கடந்த 5ம்தேதி, அவரது சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியது, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
அதாவது, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 125 தொகுதிகளின் பட்டியலை, விஜயிடம் வழங்கி, அதிலிருந்து 75 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கும்படி, பிரவீன் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.
தி.மு.க.,வை அரசியல் எதிரி என, விஜய் விமர்சித்துள்ள நிலையில், அவரை பிரவீன் சந்தித்தது, கூட்டணிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் செயல் என்பதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., கூட்டணியை விரும்பும் தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், டில்லி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
'டிவி' விவாதங்களிலும், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆனால், பிரவீன் மீது, டில்லி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்த விஷயத்தில் அமைதி காக்கிறது.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும், காங்., கோஷ்டி தலைவர்கள் குறித்து, விஜய் கூட்டணியை விரும்பும் அக்கட்சியின் கோஷ்டி தலைவர்கள், நேற்று தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரசில், முக்கிய பதவி வகிப்பவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலின், அரசியல் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி மீது எப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு, கிரிஷ் ஷோடங்கர், 'பொறுமையாக இருங்கள். தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு குறித்த முடிவை, தி.மு.க., வரும் 20ம் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கலாம்' எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரவீன் சக்கரவர்த்தி தன் 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில், ஒரு கேலி சித்திரத்துடன், 'பன்றிகளுடன் ஒரு போதும் மல்லுக்கட்ட வேண்டாம். நீங்கள் இருவரும் சேறாவீர்கள். ஆனால், பன்றி அதை விரும்பும்' என, ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியதை பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவு நேற்று காங்கிரஸ் கட்சியில், விவாதப் பொருளானது. அவர் நம்மை சுட்டிக் காட்டுகிறாரோ என்ற குழப்பம், தி.மு.க., கூட்டணியை விரும்பும் தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களுக்கு உருவாகி உள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பிரவீன் சக்கரவர்த்தியை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள், டில்லிக்கு வலியுறுத்திய தகவல், அவருக்கு தெரிய வந்ததால், தன்னை எதிர்ப்பவர்களை பன்றிகள் என, மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அவருக்கு ராகுல் ஆதரவு இருப்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க காங்., தலைமை விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் தொடர்பாக, விஜய்க்கு ராகுல் ஆறுதல் தெரிவித்தார். அதற்காக, ராகுல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? விஜய், பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு முழுக்க, முழுக்க ராகுல் கண் அசைவுப்படி தான் நடந்துள்ளது. இதைத்தான், காங்கிரசில் இருப்போரும் தி.மு.க.,வினரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

