கோவில் பணி ஒப்பந்தங்களில் அமலுக்கு வரும் புதிய விதிகள்
கோவில் பணி ஒப்பந்தங்களில் அமலுக்கு வரும் புதிய விதிகள்
UPDATED : ஜூலை 31, 2026 06:08 AM
ADDED : ஜூலை 31, 2026 05:18 AM

சென்னை: ''கோவில்களில் ஒப்பந்த நடைமுறைகளில், புதிய விதிகள் அமலாகின்றன,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
அவரது பேட்டி: அறநிலையத் துறை கோவில்களில், நிதி முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வெளிப்படைத் தன்மைக்காகவும், ஒப்பந்த நடைமுறைகளில் புதிய விதிகள் அமலா கின்றன. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் அப்படியே தொடரும். புது ஒப்பந்தங்களுக்கு, இந்த வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படும்.
அந்த வகையில், அனைத்து கோவில்களுக்கும் ஒப்பந்தப்புள்ளி, உறுதிமொழி மற்றும் விலைப்புள்ளி போன்ற மாதிரி படிவங்கள், இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஒப்பந்த நடைமுறைகள் அனைத்தும் இனி, 'www.tntenders.gov.in' என்ற இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும். இதன் மூலம் தகுதியுள்ள அனைவரும் எங்கிருந்தும் பங்கேற்க முடியும். ஒப்பந்ததாரர்களுக்கு ஜி.எஸ்.டி., மற்றும் 'பான்' எண்கள் கட்டாயம். கருப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்று முக்கியம்.
அடிப்படை விலைக்கு கீழே, ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து விலையை குறைக்கலாம். இறுதியாக, குறைந்த தொகையை குறிப்பிடும் ஒப்பந்ததாரருக்கு வாய்ப்பு வழங்கப்படும். கோவில் கடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் வாகன காப்பகங்களிலும், இயந்திரங்கள் வாயிலாக ரசீது வழங்குவது கட்டாயம்.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, கோழிகளுக்கு தனியாக குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டு, கணக்குகள் சரிபார்க்கப்படும்.
ஒப்பந்தத்தில் விதிமீறல் இருந்தால், 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து, ரத்து செய்யும் அதிகாரம் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருமானம் தரும் ஏல உரிமங்கள், இனி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
