3 மணி நேரப்பேச்சில் முடிவு எதுவும் இல்லை; புடின்-டிரம்ப் பேசினர்; சிரித்தனர்; கைகுலுக்கினர் - அவ்வளவு தான்!
3 மணி நேரப்பேச்சில் முடிவு எதுவும் இல்லை; புடின்-டிரம்ப் பேசினர்; சிரித்தனர்; கைகுலுக்கினர் - அவ்வளவு தான்!
ADDED : ஆக 17, 2025 08:07 AM

அலாஸ்கா: அ மெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சர்வதேச நாடுகள் உற்றுநோக்கிய, 'அமைதியை நோக்கி' என்ற பெயரிலான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையிலான நேரடி சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைனுடனான போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் ஏற்படவில்லை.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், 'நேட்டோ' எனப்படும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ள சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் இணைய முயற்சித்தது.
தொடர் முயற்சி
இதில் உக்ரைன் இணைந்தால், தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து எனக்கூறி அந்நாட்டிற்கு எதிராக, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. இந்த போர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
போரில், உக்ரைனுக்கு இதுவரை, 5.75 லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. போர் தொடர்வது அமெரிக்க பொருளாதாரத்திற்கும் சுமையாக உள்ளது. எனவே, உக்ரைன் -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, தன் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காபை கடந்த வாரம் ரஷ்யாவுக்கு அனுப்பினார். அவர், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். இதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் - டிரம்ப் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நேற்று நடந்தது. இதில், ரஷ்யா தரப்பில் அதிபர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும், அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பு மூன்று மணிநேரம் நீடித்தது. அதில் உக்ரைனில் போரை நிறுத்துவது, ரஷ்யா - அமெரிக்கா இடையே உறவை மேம்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர்.
போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் அது பற்றிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
சந்திப்பு முடிந்த பின், இரு நாட் டு அதிபர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அதில், ரஷ்ய அதிபர் பு டின் கூறியதாவது:
எங்களுக்குள் நடந்த பேச்சு ஆக்கப்பூர்வமாகவும், பரஸ்பர மரியாதைக்குரிய சூழலிலும் நடந்தது. மேலும், இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி. ரஷ்யாவின் சுகோட்கா தீவுக்கும், அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள டையோமீட் தீவுக்கும் இடையே உள்ள வெறும் 4 கி.மீ., நீளமுள்ள பெரிங் நீரிணை தான் நம் நாடுகளை பிரிக்கின்றன.
நாம் நெருங்கிய அண்டை நாடுகள் என்பதே உண்மை.
அச்சுறுத்தல்
ரஷ்யா - அமெரிக்கா இடையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பேச்சும் நடத்தப்படவில்லை. அது, இருதரப்பு உறவுக்கும் கடினமான காலக்கட்டம். தற்போது அதிபர் டிரம்புடன் நல்ல உறவு உள்ளது. உக்ரைன் பிரச்னைக்கான அவரது முயற்சிகள் மதிப்புமிக்கவை. உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும் உக்ரைன் மக்களை சகோதரர்களாகவே கருதுகிறோம்; இந்த போர் எங்களுக்கு துயரமானது. எனவே, இதை முடிவுக்கு கொண்டு வர ஆர்வமாக உள் ளோம். '2022ல் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது' என டிரம்ப் பலமுறை குறிப்பிட்டு உள்ளார்; அ து உண்மை தான்.
அவருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. அமைதியை நோக்கி முன்னேறுவதற்கு இந்த உச்சி மாநாடு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: போர் நிறுத்த உடன்படிக்கையை இந்த சந்திப்பில் அடையவில்லை. இருப்பினும் இது ஒரு பயனுள்ள சந்திப்பு. சில முன்னேற்றங்களை எட்டியுள்ளோம். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷ்யாவுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது.
எனக்கு அதிபர் புடினுடன் நல்ல உறவு உள்ளது. ரஷ்யா, 2016 அமெரிக்க தேர்தலில் தலையிட்டது என்ற புரளி எங்களுக்குள் இடையூறாக இருந்தது. அதை, புடினும் புரிந்து வைத்திருந்தார்.பல விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம்; சிலவற்றை ஏற்கவில்லை. அதில் ஒன்றை தவிர மற்றவை முக்கியத்துவம் இல்லாதவை.
உக்ரைனில் வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவதை நாங்கள் நிறுத்த உள்ளோம். புடினும் அதை விரும்புகிறார். விரைவில் மீண்டும் ஒரு சந்திப்பு நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து அதிபர் புடின், “அடுத்த முறை மாஸ்கோவில் சந்திப்போம்,” என ஆங்கிலத்தில் கூறினார். இதற்கு, “சுவாரசியமான விஷயம். அது பற்றி தெரியவில்லை. அதற்காக எனக்கு எதிர்ப்பு வரலாம். ஆனால், அது நட க்கவும் வாய்ப்புள்ளது,” என்றார், டிரம்ப்.