ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: திருமா
ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: திருமா
ADDED : மே 13, 2026 03:23 AM

சென்னை: ''த.வெ.க., ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து, இன்னும் முடிவெடுக்கவில்லை,'' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
த.வெ.க., ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து, எங்கள் வலிமை உணர்ந்து, சூழலுக்கு ஏற்ப வேண்டாம் என்ற முடிவை எடுத்தோம். இன்னமும் கூட, முன்னணி நிர்வாகிகள் ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நான் இறுதி முடிவை எடுக்கவில்லை.
தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டே, ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக, ஆதரவு அளித்துள்ளோம். அமைச்சரவையில் இடம் பெற்றால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பொருள். அதனால், முடிவெடுக்க தாமதமாகிறது.
என்னை முதல்வராக்க நடந்த முயற்சியை, காங்கிரஸ் முறியடித்து விட்டதா என்று தெரியாது. என்னை முதல்வராக்கும் முயற்சி நடந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை.
தமிழகத்தில், தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர் முதல்வராகும் அளவுக்கு, தமிழ் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. இந்தியாவில், உத்தர பிரதேசம், ஆந்திரா, மஹாராஷ்டிரா, பீஹார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், தலித்துகள் முதல்வராகி உள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் ஒரு நுாறு ஆண்டானாலும், அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
இவ்வாறு அவர் கூறினார்.
