சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதமில்லை: மூன்று மாதங்களில் 95 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல்
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதமில்லை: மூன்று மாதங்களில் 95 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல்
UPDATED : நவ 08, 2025 12:31 AM
ADDED : நவ 08, 2025 12:30 AM

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், மூன்று மாதங்களில் 95 சதவீத மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கவர்னர் மாளிகை புள்ளி விபரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில், கவர்னர் ரவி காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள், மக்களின் நலனுக்கு எதிரானது என்றும், ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, 2021 செப்., 18ம் தேதி முதல், கடந்த அக்., 31ம் தேதி வரை, 211 சட்ட மசோதாக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 81 சதவீத மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதில், 95 சதவீத மசோதாக்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13 சதவீத மசோதாக்கள், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில், 60 சதவீத மசோதாக்கள், மாநில அரசின் பரிந்துரைப்படி அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள எட்டு மசோதாக்கள், கடந்த அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் பெறப்பட்டவை. அவை, தற்போது பரிசீலனையில் உள்ளன.
கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ பதிவுகள், சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளிகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை தெளிவுபடுத்துகின்றன. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள், மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பின், அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தார். அதுகுறித்து, மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மசோதாக்கள், சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு சமர்பிக்கப்பட்டன. அவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த மசோதாக்கள், பார்லிமென்ட் சட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, 'யு.ஜி.சி.,' எனும் பல்கலை மானிய குழு மற்றும் மாநில சட்டசபை வரம்புக்கு அப்பாற்பட்டவை. அதனால், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக கவர்னர் ரவி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடவும், தமிழக மக்களின் நலனை உறுதி செய்திடவும், ஒவ்வொரு சட்ட மசோதாவையும், கவனமாக ஆய்வு செய்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, எந்த அரசியல் பாரபட்சமுமின்றி, நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் கடமையாற்றி வருகிறார்.
தமிழக மக்களின் மீது, கவர்னர் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். தமிழ் பாரம்பரியம், கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடு ஆகியவற்றை ஊக்குவித்து, ஆதரவு அளித்து வருகிறார். தமிழ் கலாசாரத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்த சட்ட மசோதாக்கள், 2021 செப்., 18 முதல் 2025 அக்., 31 வரை - 211 ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதாக்கள் - 170 ஒரு வாரத்திற்குள் ஒப்புதல் - 73 ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் - 61 மூன்று மாதத்திற்குள் - 27 மூன்று மாதங்களுக்கு மேல் - 9 ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது - 27 திரும்ப பெறப்பட்டது - 6 பரிசீலனையில் உள்ளது - 8

