சென்னையில் சுற்றுப்பயணம் வேண்டாம்; பழனிசாமிக்கு மா.செ.,க்கள் முட்டுக்கட்டை
சென்னையில் சுற்றுப்பயணம் வேண்டாம்; பழனிசாமிக்கு மா.செ.,க்கள் முட்டுக்கட்டை
ADDED : ஜன 27, 2026 03:45 AM

'தேர்தல் நெருக்கத்தில் பிரசாரம் செய்து கொள்ளலாம்' என, அ.தி.மு.க., சென்னை மாவட்டச் செயலர்கள், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு தடை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதிவாரியாக பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை, 181 சட்டசபை தொகுதிகளில் பிரசாரத்தை முடித்து உள்ளார்.
கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும், ஒரு தொகுதிக்காவது சென்ற பழனிசாமியால், தலைநகர் சென்னைக்குள் நுழைய முடியவில்லை. மா.செ.,க்களின் விருப்பமின்மையே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வழக்கமாக பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்துக்கான வேலைகளை, கட்சியின் மா.செ.,க்கள் தான் செய்ய வேண்டும். கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்கு பின், பிரசாரக் கூட்டத்துக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கூடுதல் செலவு ஏற்பட்டு, ஒரு மா.செ-.,வுக்கு, 2 - 3 கோடி ரூபாய் வரை செலவாகிறது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள மா.செ.,க்கள் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பி, கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர். தங்களுக்கான தலா ஒரு தொகுதியை தேர்வு செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள எட்டு தொகுதிகளில், பெரும்பாலானவற்றை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளி விடும் முடிவுக்கு பழனிசாமி வந்துள்ளார்.
இந்நிலையில், பழனிசாமியின் சுற்றுப்பயண கூட்டங்களை சென்னையில் நடத்த பழனிசாமி தீர்மானித்துள்ளார். இதைத்தான், தற்போது சென்னை மாவட்டத்தில் இருக்கும் எட்டு மா.செ.,க்களும் எதிர்க்கின்றனர்.
'கூட்டணி கட்சிகளில் இருந்து யாரோ போட்டி போடக்கூடிய தொகுதிக்கு, நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்?' என அவர்கள் நினைக்கின்றனர்.
இதற்கிடையில், பழனிசாமி ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்த தொகுதிகளில், பழனிசாமி வருகை, மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; செலவு தான் அதிகம் ஆகியிருக்கிறது என, பல மாவட்ட நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
இதனால், 'நம் மாவட்டத்தில் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம்; தேர்தல் தேதி அறிவித்த பின் நடக்கும் பிரசாரம் மட்டுமே போதுமானது; கையில் இருக்கும் பணத்தை, தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, சென்னை மா.செ.,க்கள் ஒன்று கூடி முடிவெடுத்து உள்ளனர். இதனால், பழனிசாமியின் சென்னை சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
சமீபத்தில் சென்னை புறநகரான திருவள்ளூர், திருப்போரூர், சோழிங்கநல்லுார் தொகுதிகளில் பிரசாரம் செய்த பழனிசாமியால், சென்னையில் ஒரு தொகுதியில் கூட இதுவரை நுழைய முடியவில்லை. இதனால், தேர்தல் அறிவிக்கும் முன், சென்னையில் தன் சுற்றுப்பயணம் இருக்க வேண்டும் என, மா.செ.,க்களிடம் பழனிசாமி பேசி வருகிறார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

