ADDED : மே 04, 2026 05:05 AM

துாத்துக்குடி: பாரம்பரிய தொழிலாக நடந்து வரும் உப்பள பணிகளிலும், வட மாநில தொழிலாளர்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், வேம்பார் முதல் பெரியதாழை வரையில், 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
உப்பு வாறுதல், கோடு போடுதல், உப்பு அள்ளுதல் என, நேரடியாகவும், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு மூட்டை பிடித்தல், லோடு மேன்கள் என, பல்வேறு பணிகளில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .
இதில், பலரும் தலைமுறை தலைமுறையாக உப்பள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பீஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், உப்பு உற்பத்தி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'உப்பள பணிகளுக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளதால், வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது .
'பீஹார், ஒடிஷா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு கூலியாக, 800 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
'மாவட்டம் முழுதும், 2,000க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர், உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்' என்றனர்.
