ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை பொருளாதார ரீதியாக நல்ல முடிவு: சொல்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை பொருளாதார ரீதியாக நல்ல முடிவு: சொல்கிறார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ADDED : டிச 31, 2024 04:47 AM

''ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது என சொல்லி விட முடியாது. இங்குள்ள சிலர் வரவேற்றும் உள்ளனர்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: டில்லியில் தேர்தல் ஆணையராக நான் இருந்தபோது, மன்மோகன் சிங் என்னை பார்க்க கட்சியினர் சிலருடன் வந்தார்; அவ்வளவு எளிமையானவர். தனக்கென பதவி உள்ளது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ள மாட்டார். அவரிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கும்போது எழுந்து நின்றபடி தான் கையெழுத்திடுவார். சிலரின் செயல்கள் பிடிக்கவில்லை எனில் நேரடியாக சொல்லி விடுவார்.
சிபாரிசு போன்ற விஷயங்களில் தலையிடுவது கிடையாது. 1991ல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நம் நாட்டை மீட்க, புதுப்பது வழிகளை கடைப்பிடித்தார். இதனால், உலகளவில் இந்தியாவின் தோற்றம் நன்றாக வளர்ந்தது. தேர்தல் ஆணையரால் தனிப்பட்ட முறையில், எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆனால், சில கட்சிகளை மட்டும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை என்பது போல பேசுகின்றனர்.
ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது என சொல்லி விட முடியாது. இங்குள்ள சிலர் வரவேற்றும் உள்ளனர். காலப்போக்கில் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றினால், இதை சாத்தியப்படுத்த முடியும்; எனவே மாற்ற வேண்டும். தனியாக ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது; அரசியல் தான் முடிவு செய்ய வேண்டும்.
நிர்வாக மற்றும் பொருளாதார ரீதியாக பார்த்தால், இது நல்ல முடிவு. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏழு முதல் எட்டு தேர்தலாவது நடக்கிறது. இது தேர்தல் ஆணையத்துக்கு சவால்களை தருகிறது. அரசு மற்றும் கட்சிகளுக்கும் கூட இது சவால் தான். தேர்தல் வந்து விட்டால், கட்சிகள், ஒரு பக்கம் செலவு செய்ய வேண்டும். பிரசாரத்தில் வன்முறையும் ஏற்படுகிறது. அதை மாற்ற, ஒரே நாடு; ஒரே தேர்தல் நல்ல வழி. எனவே, அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டால், நடைமுறைக்கு சாத்தியம் அதிகம்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கான செலவும் அரசுக்கு அதிகரித்து வருகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தில் ஒரே நேரத்தில் ஓட்டெடுப்பு நடத்த முடியாது என்ற கருத்தில், எனக்கு உடன்பாடில்லை. தேர்தல் எண்ணிக்கையை குறைக்க, ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முக்கியம்.
இந்தியாவில் பிரிட்டன் முறையை பின்பற்றியே தேர்தல் நடக்கிறது. பிரிட்டன் சிஸ்டத்தை பின்பற்றுவதற்கு பதில், புது சிஸ்டத்தை நாம் கடைப்பிடித்தால் புது வழி கிடைக்கும். ஒரே நாடு தேர்தல் முறை சாத்தியமாக கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். தேர்தல் விதிமுறைகளிலும் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -