வாழ்க்கையில் தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும்; முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை 'அட்வைஸ்'
வாழ்க்கையில் தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும்; முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை 'அட்வைஸ்'
ADDED : ஜன 25, 2026 08:12 AM

புதுச்சேரி: சமூக வலைதளங்களில் தேவையில்லாததை, அறிவு என்று நினைத்து கொண்டு படித்து கொண்டிருக்கிறோம் என, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேசினார்.
'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில், புதுச்சேரி ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கில் நேற்று நடந்த வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழாவில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. அவர் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், அவரது வீடியோ பேச்சு ஒளிபரப்பப்பட்டது.
அதில் அவர், கூறியதாவது: 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பர். ஒவ்வொரு மனிதனுக்கும் செய்தி என்பது முக்கியம். என்ன செய்தி என்பது அதைவிட முக்கியம். படிப்பு என்பது செய்தி-தகவலை உள்ளடக்கியது. அதுதான் அறிவாகிறது.நிறைய நேரங்களில் தேவையில்லாததை படிக்கிறோம். அது வாழ்க்கைக்கு பயன்படாது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் தேவையில்லாததை அறிவு என்று நினைத்து கொண்டு படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 'தினமலர்' மாணவர்களின் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து பட்டம் இதழை கொண்டு வந்துள்ளது. அதுதான், 'தினமலரின்' சிறப்பு. எதை படித்தால், போட்டி தேர்வுக்கு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பயன்படும் என்பதை அறிந்து மாணவர்களுக்கான சிறப்பு பிரதியான பட்டத்தை தினமலர் கொண்டு வந்துள்ளது.
அதற்காக 'தினமலர்' நாளிதழை பாராட்டுகிறேன். பட்டம் இதழை படித்துவிட்டு உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரையும், அறிவியல், விளையாட்டு, விருதாளர்கள் உள்ளிட்ட பல தகவல்களை தெரிந்து கொண்டு, மாணவர்கள் இங்கு, வினாடி வினா போட்டியில் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது. எப்போதும் தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் படிப்பதைவிட, நமக்கு தேவையானதை நாம் படிக்க வேண்டும்.
நேரம் இல்லை; அவ்வளவு புத்தங்களை எப்படி படிக்க முடியும் என்று தோன்றலாம். உங்களுடைய துறையில் நீங்கள் நிபுணராக வர வேண்டும் என்றால், அந்த துறையில் நிறைய படிக்க வேண்டும். நான் அரசியலில் இருக்கிறேன். இயற்கை விவசாயம், விளையாட்டு மீது எனக்கு ஆர்வம். அதனால் அந்த துறைகளில் ஆழமாக படிப்பேன்.
அதுபோல் உங்களுக்கு எது ஆர்வமோ அதில் படிக்க வேண்டும். புதிய விஷயங்கள் தினமும் நிறைய வெளிவந்து கொண்டிருக்கிறது. எனவே வாழ்நாள் முழுதும் புதிய விஷயங்களை தெரிந்து கொண்டு உங்களை செதுக்கிக் கொள்ள வேண்டும். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை. அவர்கள் அறிவு எனும் முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்துள்ளவர்கள் என்று அர்த்தம்.
விருது வாங்கினால் நீங்கள் அறிவாளி என்று இந்த உலகம் சொல்லப்போவதில்லை. உங்களுடைய அறிவை பரிசோதிக்க பல இடங்களில் பல வாய்ப்புகள் இன்னும் காத்திருக்கிறது. அதனால் அடுத்து எது படித்தாலும், தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், அறிவு தேடலை தொடர வேண்டும்.
நம்மை சுற்றி அறிவு களஞ்சியங்கள் உள்ளன. எனவே நிறைய புத்தகங்களை படியுங்கள். அந்த புத்தகங்களுடன் வாழுங்கள். நாம் வாழ முடியாத வாழ்க்கையெல்லாம் புத்தகங்களை படிப்பதன் மூலம் வாழ முடியும். கிரீஸ், ஐரோப்பிய நாடுகள், பண்டைய கலாசாரங்கள், அமெரிக்க நாடுகளில் நாம் வாழ முடியவில்லை என்றாலும் கூட, புத்தகங்கள் மூலமாக அவர்கள் எப்படி வாழ்ந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
தொடர்ந்து படிப்பதோடு, வாழ்வில் 'அப்டேட்' ஆகிக் கொண்டே இருக்க வேண்டும்.நாம் தான் படித்துவிட்டோமே, நமக்குதான் எல்லாம் தெரியும் என நினைத்தால், அது தான் முட்டாள் தனத்தின் ஆரம்பமாக இருக்கும். மாணவர்களை வழிகாட்டி ஊக்கப்படுத்தும் பணியை 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

