தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்; கோவை 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' கருத்தரங்கில் வலியுறுத்தல்
UPDATED : ஜன 11, 2026 06:50 PM
ADDED : ஜன 11, 2026 08:14 AM

கோவை: தமிழ்நாடு பா.ஜ., மாநில தொழில்சார் பிரிவு சார்பில் தொழில் துறை நிபுணர்கள் சந்திக்கும் 'புரபஷனல்ஸ் கனெக்ட்-2026' மாநாடு, கோவையில் நேற்று நடந்தது.
'தேசத்தின் வளர்ச்சியில் தொழில் நிபுணர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பிலான கலந்துரையாடலின் நிறைவில் தேசிய சிந்தனையை அனைவரிடமும் கொண்டு சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது.
சமூக மூலதனம்
பா.ஜ., மாநில துணை தலைவர் கனகசபாபதி: நம் நாடு அசாத்தியமான நாடு. 2,000 ஆண்டுகளில், 1800 ஆண்டுகள் நாம் பணக்கார நாடாக இருந்தோம். உலகில், 33 சதவீத பொருளாதார பங்களிப்பு நம்முடையதாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின், நம் நாட்டின் பொருளாதார வளம் சுரண்டப்பட்டது. இப்படியிருக்க மோடி ஆட்சிக்கு வந்தபின் முதன் முறையாக சமூக மூலதனம் அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த, 11 ஆண்டுகளில் நாட்டில் பெரும் மாற்றம் நடந்துள்ளது. பொருளாதாரத்தில், 11வது இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளோம். விரைவில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறுவோம். அசாத்திய தொழில் முனையும் தன்மை நம்மிடம் உண்டு. காலனி சிந்தனைகளை தாண்டி பிரதமர் உத்வேகம் தரும் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறார். சுயசார்பு பொருளாதாரம் நம் நாட்டின் முன்னேற்றம்.
தேசிய சிந்தனையே வழி
மூத்த ஆடிட்டர் ராமநாதன்: குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. குறு முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை சங்கிலித்தொடராக அனைவரும் சேர்ந்து வளர்ந்து வருகின்றனர். நாட்டின் ஏற்றுமதி, 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகளவில் உருவாகி வருகின்றனர்.
'முத்ரா' வங்கிக்கடன் அதிகம் பெற்று பயனடைந்து வருகின்றனர். தனித்துவம், நிறுவனம், சமூகம் ஆகியவற்றின் சங்கிலித்தொடர்பில் இருப்பவர்கள் தேசிய சிந்தனையை மற்றவர்களிடம் விதைக்க வேண்டும். இளம் தலைமுறையினரிடம் இதை கொண்டு சேர்க்கும் பொறுப்பு தொழில் நிபுணர்களுக்கு உண்டு. தேசிய சிந்தனையால் தான் நாட்டை உயர்த்த முடியும்.
தரமான நீதிபதிகள்
மூத்த வழக்கறிஞர் ராம கிருஷ்ணன்: பாமர மக்கள் பயன்பெறும் வகையில் இன்று சட்டங்கள் உள்ளன. நம் நாட்டில் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகங்கள் அதிகரித்துள்ளன. அதேசமயம், நீதிமன்ற நடைமுறைகள் சில சமயங்களில் தொழில் வளர்ச்சியை பாதிக்கின்றன. வர்த்தகம் சார்ந்த வழக்குகளில் இருக்கும் இழுபறியை தவிர்க்க நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தரமான நீதிபதிகளை இங்கு நியமிக்க வேண்டும். தகுதியானவர்கள் இருந்தால்தான் நாடு முன்னேறிக்கொண்டு செல்லும்.
முன்னோடியாக இந்தியா!
மூத்த மருத்துவ நிபுணர் புவனேஷ்வரன்: இந்த அகண்ட பாரதத்தில் ஆரோக்கியத்துக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எல்லோருக்கும் உடல் நலம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். பணம் இருப்பவர்களுக்கு மருத்துவம் எளிது. தமிழகத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டம் உள்ளது.
அதேபோல் மத்திய அரசின் ரூ.5 லட்சம் வரையிலான ஒரு குடும்பத்துக்கான காப்பீட்டு திட்டத்தில், 33 லட்சம் குடும்பங்கள் இணைந்துள்ளன. நம் மாநிலமும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; இதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். நாம் எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கிறோம்.
'சர்வதேச வலை பின்னலில் இந்தியா'
மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன்: பிரதமர் மோடிக்கு எதிராக சதிவலை நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இது தொடர்ந்து நடந்துவரும் விஷயம். வங்க தேசத்தில் எதிரி நாட்டு உளவாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பெரிய பாதுகாப்பு கவசமாக மோடிக்கும், நாட்டுக்கும் உள்ளார். ஆசிய நாடுகளில் அமெரிக்கா சொல்வதை கேட்கும் பலவீனமற்ற தலைமையே தேவை. இந்தியாவில் அப்படி இல்லை.
இந்தியாவுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தி மிகப்பெரிய அழுத்தத்தை அமெரிக்கா தருகிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, 500 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் என எச்சரிக்கிறது. நம்மை பலவீனப்படுத்த அமெரிக்க சி.ஐ.ஏ., வாயிலாக பல்வேறு நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும் இந்தியா ஸ்தம்பிக்கவில்லை; ஸ்தம்பிக்கவும் செய்யாது.
அனைத்து தொகுதிகளிலும் மோடி
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த, 5 ஆண்டுகளில், 80 கோடி பேருக்கு ரேஷன் மூலமாக விலையில்லா உணவுப்பொருட்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. பல மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசால் வழங்கப்படுவதாகவே எண்ணப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளில், தமிழகத்துக்கு, ரூ.11 லட்சம் கோடி தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடந்துள்ள, எஸ்.ஐ.ஆர்., பணியில் குளத்துார், சேப்பாக்கம் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட பெயர்கள் சரியாக இருந்ததால் தான் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில், 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், 10 லட்சம் பேர் மட்டுமே பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் முகவர்களை அதிகளவில் சேர்த்துள்ள மூன்றாவது கட்சியாக பா.ஜ., உள்ளது. களப்பணி ஆற்ற வேண்டும். அது தான் கட்சிகளை காப்பாற்றும். மோடிக்கு இருக்கும் கள அனுபவம் இந்தியாவில் வேறு ஒரு தலைவருக்கு கிடையாது. டிரம்பால் இந்தியாவை ஒன்றும் செய்ய முடி யாது என, பலருக்கும் தெரியும்.
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், இந்தியா, 76 வது இடத்தில் இருந்து, 39 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த, 2015 வரை இந்தியாவில், 15 பல்கலைகள் மட்டுமே இருந்தன. இன்று, 54 பல்கலைகள் உள்ளன. உயர்கல்வி நிறுவனங்கள், 70 ஆயிரத்து, 018 உள்ளன. ஐ.ஐ.டி., க்கள், 16 ல் இருந்து, 23 ஆக உயர்ந்துள்ளன. மத்திய அரசு பேசவில்லை மாறாக செயல்படுகிறது. இந்தியா, 360 கோணத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மோடி போட்டியிடுவதாக நினைத்து பணி செய்ய வேண்டும்.
ஜி.எஸ்.டி., புரட்சி
பா.ஜ., மாநில அமைப்பாளர் ராகவன்: ஜி.எஸ்.டி., என்பது ஒரு புரட்சி. அது வந்த பின்னரே இந்தியாவிலேயே முதல் முறையாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஜி.எஸ்.டி., குறித்த விளக்கம் அடங்கிய, 30 ஆயிரம் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெற வேண்டும் என, நிதியமைச்சரை சந்தித்து வழங்கியுள்ளோம்.
தமிழக அரசு நிதி நிலையை எந்தளவுக்கு மோசமாக்கியுள்ளது என்பது குறித்து தொழில்சார் பிரிவு வெள்ளை அறிக்கையை தயாரித்து வருகிறது. தி.மு.க., அரசு தமிழகத்தின் நிதி நிலைமையை கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தி.மு.க., அரசுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
நடமாடவே பயம்!
மேடைப்பேச்சாளர் மதுவந்தி: பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு இல்லை. கோவை விமான நிலையம் பின்புறம் ஒரு பெண் சீரழிவுக்கு ஆளானது அதிர்ச்சிக்குரியது. நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள் என பாதிக்கப்படும் பெண்கள் மீதே குற்றத்தை திருப்புகின்றனர்.
ஒரு பெண் ஆண்ட நாடு இது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. இன்று திருநங்கைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. போலீசார் நடந்துகொள்ளும் விதமே கொச்சையாக இருக்கிறது. தமிழகத்தில் பெண்ணாக நடமாட நான் பயப்படுகிறேன். திராவிட மாடலில் பெண்கள் பாதுகாப்பு கேவலம். பொங்கலுக்கு ரூ.3000 என்பது யார் பணம்; மக்கள் பணம்தான்.

