புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு: தலைமை செயலக சங்கம் முற்றுகை
புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு: தலைமை செயலக சங்கம் முற்றுகை
ADDED : ஜன 09, 2026 07:14 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை, தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் வரவேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறுப்பினர்கள், சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
'தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், 'டாப்ஸ்' எனப்படும் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ம் தேதி அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஓய்வு பெற்ற பின், கடைசி மாதம் பெற்ற ஊதியத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பை, ஜாக்டோ - ஜியோ, போட்டா - ஜியோ உட்பட பல்வேறு சங்கங்கள் வரவேற்றன. அதன் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு இனிப்பு ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சில சங்கங்கள் மட்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், கடந்த 5ம் தேதி நடந்தது. அதில் பங்கேற்ற 30 உறுப்பினர்களும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தலைமைச் செயலக சங்கம், அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். அதை ஏற்று சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகம் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க அலுவலகத்தை, சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ரகுராம் மற்றும் உறுப்பினர்கள், நேற்று உணவு இடைவேளையின்போது முற்றுகையிட்டனர். இதனால், தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கத் தலைவர் வெங்கடேசன் இல்லாததால், செயலர் ஹரிசங்கர், இணை செயலர்கள் லெனின், ஜீவன், பொருளாளர் பிரபா ஆகியோரை உறுப்பினர்கள் சந்தித்தனர். பழைய ஓய்வூதிய திட்டமே நம் ஒற்றை கோரிக்கையாக இருக்கும்போது, சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை சங்கம் எப்படி வரவேற்றது என கேள்வி எழுப்பினர்.
உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் பணிக்கு திரும்பினர்.

