தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ள ஓ.பி.எஸ்., 'பலே ஸ்கெட்ச்'

முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ள ஓ.பி.எஸ்., 'பலே ஸ்கெட்ச்'

முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ள ஓ.பி.எஸ்., 'பலே ஸ்கெட்ச்'


ADDED : மார் 05, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தென் மாவட்டங்களில் தன் பலத்தை காண்பிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மார்ச் 7ல் தனது ஆதரவாளர்களை முறைப்படி தி.மு.க.,வில் இணைக்கும் விழாவை நடத்த உள்ளார்.

இதன் மூலம் முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ளவும், அ.தி.மு.க., முகாமில் தென் மாவட்ட முக்குலத்தோருக்கு முகமாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு 'செக்' வைக்கவும் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த பன்னீர்செல்வம், மூன்று முறை முதல்வராக, துணை முதல்வராக அ.தி.மு.க.,வில் கோலோச்சினார். இவருக்கும், பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்ட 'இரட்டை தலைமை' சர்ச்சையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீண்டும் கட்சியில் சேர கடைசி வரை 'நோ என்ட்ரி' போட்டு விட்டார், பழனிசாமி. இதனால் அதிருப்தியாகி 'அரசியல் எதிர்காலம்' கருதி ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார்.

ஆதரவாளர் பலத்தை காட்ட முடிவு

தற்போது ஸ்டாலினிடம் தன் பலத்தை காட்டி, தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக வலம்வர திட்டமிட்டுள்ளார் பன்னீர்செல்வம். இதற்காக மதுரையில் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிவரக்கோட்டை அருகே வரும் 7ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களை முறைப்படி இணைக்கும் விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான பூமிபூஜையும் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி., தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த இணைப்பு விழா பின்னணியில் தற்போதைய திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வரும் சட்டசபை தேர்தலில் கடும் நெருக்கடியை கொடுக்கும் திட்டமும் பன்னீர்செல்வத்திடம் உள்ளது.

இதுகுறித்து பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: ஜெயலலிதாவிடம் இருந்தபோது அவரிடம் காட்டிய பணிவு, விசுவாசத்தை பன்னீர்செல்வம் தற்போது ஸ்டாலினிடம் தொடரும் முடிவில் உள்ளார். அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் குறுகிய நாளில் இவ்விழாவை முடிவு செய்து ஸ்டாலின் பங்கேற்பையும் உறுதி செய்தோம். அவரும் 'சந்தோஷம், விழாவிற்கு வருகிறேன்' என உற்சாகமாக சம்மதம் தெரிவித்தார்.

பழனிசாமியின் 'கணக்கு'


அ.தி.மு.க.,வில் தற்போது முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பழனிசாமி ஆர்வம் காட்டுவதில்லை என புகார் உள்ளது. உதயகுமாரை வைத்து தென் மாவட்டங்களை சரி செய்துகொள்ளலாம் என்பது பழனிசாமியின் கணக்கு. அவரது கணக்கை தவிடுபொடியாக்கும் வகையில் தான் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியில் இணைப்பு விழாவை நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்தார். தினமும் ஸ்டாலின், உதயநிதி குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடுவதை உதயகுமார் வழக்கமாக கொண்டுள்ளார். அவருக்கு 'செக்' வைக்கும் வகையில் பன்னீர்செல்வத்தின் இந்த முடிவை ஸ்டாலினும் வரவேற்பார்.

இதுதவிர மதுரையில் நடந்த சட்டசபை தொகுதி நிலவர ஆய்வில், முதல்வர் மருமகன் சபரீசன் திருமங்கலம் தொகுதியில் கண்டிப்பாக தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என 'அசைன்மென்ட்' கொடுத்துள்ளார்.

அதற்கும் பக்கபலமாக தன் ஆதரவாளர்கள் தி.மு.க.,வுக்கு துணை நிற்கவும், தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க ஒரு லட்சம் ஆதரவாளர்களை ஸ்டாலின் முன்னிலையில் திரட்டிக் காட்டவும் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us