UPDATED : அக் 26, 2024 06:43 AM
ADDED : அக் 25, 2024 10:12 PM

கோவை: லோக்சபா தேர்தலில் செய்யப்பட்ட பணிகளுக்கான தொகை எவ்வளவு என, மாவட்டம் வாரியாக முன்மொழிவு பெறப்பட்டு, ரூ.1,009 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்து, அரசாணை பிறப்பித்திருக்கிறது. அதில், மதிப்பூதியம் குறிப்பிடாததால், தேர்தல் ஊழியர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.
லோக்சபா தேர்தல், ஏப்.,19ல் நடந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கு வழக்கமாக மதிப்பூதியம் வழங்கப்படும். தேர்தல் முடிந்து நான்கரை மாதத்துக்கு மேலாகியும், இன்னும் வழங்கவில்லை.
இதுதொடர்பாக, 19ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டம் வாரியாக கேட்பு பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதில், லோக்சபா தேர்தலில் செய்யப்பட்ட அனைத்து விதமான பணிகளுக்கும் சேர்த்து, மாவட்டம் வாரியாக பெறப்பட்ட முன்மொழிவுகள் அடிப்படையில், ரூ.1,009 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கவில்லை.
இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது: இப்போது பிறப்பித்துள்ள அரசாணையில், தேர்தலுக்கு செய்த பணிகளுக்குரிய பில் தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
பணிபுரிந்த அலுவலர்களுக்கான மதிப்பூதியம் விடுவிக்கவில்லை. அதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். பண்டிகைக்கு முன் வழங்கினால், செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.