ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத வெளிநாடு வாழ் இந்தியர்கள்
ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத வெளிநாடு வாழ் இந்தியர்கள்
ADDED : டிச 29, 2024 11:39 PM

புதுடில்லி,: நாட்டின் வாக்காளர்களாக பதிவு செய்வதில் பெரும் ஆர்வத்தை காட்டிய வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதை பயன்படுத்துவதில் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை என்பது, தலைமை தேர்தல் கமிஷனின் தரவுகளின்படி தெரிய வந்துள்ளது.
இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலையொட்டி, 1 லட்சத்து 19,374 பேர் வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்தனர். இதில் அதிகபட்சமாக, கேரளாவில், 89,839 பேர் அடங்குவர். 2019 லோக்சபா தேர்தலையொட்டி, 99,844 பேர் வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்தனர்.
நடப்பாண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பதிவு செய்த 1 லட்சத்து 19,374 பேரில், வெறும் 2,958 பேர் மட்டுமே, நம் நாட்டுக்கு வந்து லோக்சபா தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். இதில், 2,670 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கூட ஓட்டுரிமையை பயன்படுத்தவில்லை. குஜராத்தில் 885 பேர் பதிவு செய்த நிலையில், இருவர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.
இதே போல், மஹாராஷ்டிராவில் 5,097 பேர் பதிவு செய்த நிலையில், 17 பேரும், ஆந்திராவில், 7,927 பேர் பதிவு செய்த நிலையில், 195 பேரும் மட்டுமே லோக்சபா தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.
பயணச் செலவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான நிர்ப்பந்தம், கல்வி உள்ளிட்டவை, நேரில் வந்து ஓட்டளிக்க முடியாமல் போனதற்கான காரணங்களாக வாக்காளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

