பழனிசாமி கூட்டத்துக்கு வருமாறு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு
பழனிசாமி கூட்டத்துக்கு வருமாறு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு
ADDED : ஜூலை 24, 2025 02:15 AM

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்துக்கு, வெள்ளித் தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து வீடு, வீடாகவும், கடைகளுக்கும் சென்று பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி, தமிழகம் முழுதும் மேற்கொண்டு வருகிறார். போகுமிடமெல்லாம், தி.மு.க.,வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
'தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், பா.ஜ.,வும் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்' என, தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். இதையே, பா.ஜ.,வின் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் சொல்லி வருகின்றனர்.
ஆனால், 'தமிழகத்தில் அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்தே ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி அமைத்து, அதில் மற்ற கட்சிகளை இடம் பெற செய்வதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல' என்று பழனிசாமியும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இதனால், தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அ.தி.மு.க., - பா.ஜ., இடையே இணக்கமில்லாத சூழல் நிலவுகிறது.
'இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும்' என விரும்பும், பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 3ல் திருநெல்வேலி வரும் பழனிசாமியை, பெருமாள்புரத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரவு விருந்து வைக்க முடிவெடுத்துள்ளார்.
அவ்விருந்தில், 700 அ.தி.மு.க., நிர்வாகிகளையும் 300 பா.ஜ., நிர்வாகிகளையும் கலந்து கொள்ள வைக்கவும் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதேபோல, 'தமிழகத்தில் இரு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்' என செல்லும் இடங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பயணத்தில், பா.ஜ.,வினரும் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
தன்னுடைய பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக, இன்றும், நாளையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், பழனிசாமி மக்களை சந்தித்து, பல்வேறு இடங்களில் பேசுகிறார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் உத்தரவு படி, அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ., சார்பிலும் புதுக்கோட்டைக்கு வரும் பழனிசாமியை வரவேற்கவும், பொதுமக்களை கூட்டத்துக்கு வரவழைக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புதுக்கோட்டை நகர பா.ஜ., சார்பில், மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையில், ஏராளமான பா.ஜ.,வினர், புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் கடை கடையாக சென்று வணிகர்களையும், வீடு வீடாக சென்று பொதுமக்களையும் சந்தித்து, வெள்ளித்தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து, கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பா.ஜ.,வின் இந்த வரவேற்பைப் போல், பழனிசாமி பிரசாரத்துக்காக செல்லும் மற்ற ஊர்களிலும் மேற்கொள்ளவும், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் உத்தரவிட்டிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்
-- நமது நிருபர் - .