செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டுகிறார் பழனிசாமி: புலம்பும் அ.தி.மு.க., - மா.செ.,க்கள்
செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டுகிறார் பழனிசாமி: புலம்பும் அ.தி.மு.க., - மா.செ.,க்கள்
ADDED : பிப் 05, 2026 05:49 AM

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்துமாறு, மாவட்டச் செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால், 'செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டி என்ன பிரயோஜனம்?' என பழனிசாமிக்கு எதிராக புலம்புகின்றனர், அக்கட்சி மாவட்டச் செயலர்கள்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில் பழனிசாமி பேசியதாவது:
'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' என, பிரசாரத்தை, பல மாவட்டச் செயலர்கள் கண்டுகொள்ளவில்லை. அதை தீவிரமாக செயல்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்து கொடுத்து விட்டேன். இனியும் எதற்காக தாமதிக்கிறீர்கள்? நமக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை விலக்கி வைத்துவிட்டு, இணைந்து பணியாற்றுங்கள்.
மக்கள் அதிருப்தி
தேர்தல் பணிகளில், கூட்டணி கட்சியினரையும் இணைத்து கொள்ளுங்கள். இன்னும் சில மாவட்டங்களில் பூத் கமிட்டியே அமைக்காமல் இருக்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளன. இனியும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும், தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். அதை நமக்கு சாதகமாக்குங்கள். தி.மு.க.,வுக்கு எதிராக தைரியமாக களத்தில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, தலைமை தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்ற பின், மாவட்டச் செயலர்கள் சிலர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம், சொத்து வரி குறித்து, வீடுவீடாகச் சென்று ஆதாரத்துடன் சொல்வதே, 'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' என்ற பிரசாரத்தின் நோக்கம். ஒரு வீட்டுக்கு, 'பில்' எடுத்து கொடுக்கவே 20 நிமிடம் ஆகிறது. தேர்தல் நேரத்தில், இதுபோல பிரசாரம் செய்து கொண்டிருக்க முடியாது.
தேர்தல் பணிகளில், தலைமையிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. உதாரணமாக, 'தி.மு.க., அரசால் சென்னை ஆர்.கே. நகரில் புதிதாக கட்டப்பட்ட பூங்காவில் எதுவுமே தரமில்லை' என, வடசென்னை மாவட்ட செயலர் ராஜேஷ், ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டார். அவர் மீது, அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.
இணைந்து பணி
இதை கண்டித்து, பழனிசாமி ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அரசை எதிர்த்து போராட்ட அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்தோம்; அதுவும் இல்லை. மாவட்ட செயலருக்கே இந்த நிலைமை உள்ளது. இனி, வழக்குக்கு பயந்து தி.மு.க.,வை யாரும் எதிர்க்க மாட்டார்கள். இதற்கெல்லாம் எதையும் செய்யாமல், இணைந்து பணியாற்றுங்கள்; மக்களைத் தேடி செல்லுங்கள் என்று சொன்னால் மட்டும் போதுமா? இதுபோன்ற பல பிரச்னைகள், தலைமையிடம் இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

