கைவிட்டு போகும் அந்தஸ்து; பரிதவிக்கும் பழனிசாமி
கைவிட்டு போகும் அந்தஸ்து; பரிதவிக்கும் பழனிசாமி
ADDED : ஜன 28, 2026 08:52 AM

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அ.தி.மு.க., என்பது பெயரளவுக்கு இருப்பதால், அதன் பொதுச்செயலர் பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 'தமிழகத்தில் பழனிசாமிதான் தே.ஜ., கூட்டணியின் தலைமை' என, மேடைதோறும் சொல்கின்றனர். ஆனால், உண்மை நிலை அப்படியில்லை. அ.தி.மு.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக, 'நீங்கள்தான் கூட்டணிக்கு தலைமை' என்று கூறி, பழனிசாமியை கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தது பா.ஜ., மேலிடம்.
ஆனால், பா.ஜ., மேலிடம், பழனிசாமி தான் கூட்டணிக்கு தலைமை என எங்கும் கூறுவதில்லை. ஏனென்றால், கூட்டணி அமைக்கும் பணியை, பழனிசாமியிடம் தான் டில்லி மேலிடம் முதலில் ஒப்படைத்தது. ஆனால், கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகளில், பழனிசாமி கறாராக நடந்து கொண்டதால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியுடன் இருந்தனர்.
எனவே, கூட்டணி விஷயங்களை பா.ஜ., மேலிடமே நேரடியாக பார்க்கத் துவங்கியது. பிரதமர் வருகைக்கு முன்பாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சென்னைக்கு வந்து, விறுவிறுவென கூட்டணியை கட்டமைத்தார்.
தனக்கான ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, அன்புமணி மட்டும் தான், பழனிசாமியிடம் நேரடியாக கைகோர்த்தார். இல்லையென்றால், அவரும் பா.ஜ., தலைவர்களை சந்தித்துத்தான், கூட்டணியில் இணைந்திருக்க முடியும்.
புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியை தவிர, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புவதும், பழனிசாமியின் கறாரான செயல்பாடுகளால் தான்.
அதுமட்டுமல்ல, பன்னீர்செல்வம், ராமதாஸ், கிருஷ்ணசாமி, மற்றும் தே.மு.தி.க.-,வை கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ.,தான் முயற்சி எடுக்கிறது. அ.தி.மு.க., இப்பணிகளை கண்டுகொள்ளவில்லை. எனவே, தமிழக தே.ஜ., கூட்டணிக்கு, பா.ஜ., தலைமை தாங்கும் நிலை இயற்கையாக அமைந்து விட்டது.
இதனால்தான், மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடி, அ.தி.மு.க., குறித்து பெரிதாக எதுவும் குறிப்பிடவில்லை. கூட்டணிக்கான தலைமை என்ற அந்தஸ்து, தன் கையை விட்டு நழுவுவதால், பழனிசாமி பரிதவிப்பில் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

