பிரதமருடன் சந்திப்பு இல்லை; பழனிசாமி தரப்பு திட்டவட்டம்
பிரதமருடன் சந்திப்பு இல்லை; பழனிசாமி தரப்பு திட்டவட்டம்
UPDATED : ஏப் 05, 2025 03:13 AM
ADDED : ஏப் 04, 2025 10:32 PM

சென்னை:'தமிழகம் வரும் பிரதமர் மோடியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்திக்க, நேரம் கேட்கவில்லை' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மூன்று நாட்கள் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி, நாளை காலை, ராமநாதரம் மாவட்டம், மண்டபம் வருகிறார். பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் முடித்து, ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து டில்லி செல்ல உள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் பரவிது. இதை உறுதி செய்வது போல, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சு நடப்பதாக அமித் ஷா கூறினார். ஆனால், தமிழக நலன் களுக்காக மட்டுமே அமித் ஷாவை சந்தித்ததாக பழனிசாமி கூறினர்.
ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே, எப்படியும் கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பில், இரு கட்சித் தொண்டர்களும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் நம்பிக்கையோடு உள்ளனர்.
இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து டில்லி செல்வதற்கு முன், மதுரை விமான நிலையத்தில், பிரதமர் மோடியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருப்பதாகவும், நேரம் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் பரவியது.
ஆனால், அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என, பழனிசாமி தரப்பினர் உறுதியாக கூறுகின்றனர்.
இது குறித்து, பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், 'பா.ஜ.,வுடனான கூட்டணி விஷயத்தில் பழனிசாமி முரண்பட்ட கருத்துடன் உள்ளார். அதனால், இந்த நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அவர் விரும்பவில்லை. இப்போதைக்கு பா.ஜ., தலைவர்கள் யாரையும் பழனிசாமி சந்திக்க மாட்டார்' என்றனர்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

