பழனிசாமி சிறை செல்லும் ரகசியம் உரிய நேரத்தில் சொல்வாராம் பன்னீர்
பழனிசாமி சிறை செல்லும் ரகசியம் உரிய நேரத்தில் சொல்வாராம் பன்னீர்
ADDED : ஜன 08, 2024 02:06 AM

கிருஷ்ணகிரி:''பழனிசாமி விரைவில் திஹார் ஜெயிலுக்கு செல்வார் என, நான் பேசியது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது பரம ரகசியம். ஆனாலும், உரிய நேரத்தில், உரிய இடத்தில் அதைச் சொல்வேன்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
கிருஷ்ணகிரியில் பன்னீர் செல்வம் கூறியதாவது:
அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்கியபோது, அடிப்படை தொண்டர்களும், பொது செயலராகும் வகையில் சட்ட விதிகளை வகுத்தார்.
இணைந்து செயல்படுவோம்
அவற்றை தகர்த்து, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து, பழனிசாமி பொதுச்செயலராகி கட்சியை கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார். இதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில், அ.தி.மு.க., மீட்புக்குழு கூட்டத்தை தமிழகம் முழுதும் நடத்துகிறோம்.
பழனிசாமி முதல்வராகி, பொதுச்செயலரான பின், அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். அ.தி.மு.க., ஒன்று சேர்ந்து, தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும்.
ஏற்கனவே, தினகரனுடன் இணைந்து விட்டோம். சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்பட உள்ளார். தர்மயுத்தம் நடத்தியபோது, என்னுடன் இணைந்து செயல்பட்டு, எங்களால் வளர்க்கப்பட்டவர் முனுசாமி.
அதன்பின், பழனிசாமியுடன் இணைந்து, ரகசிய கூட்டணி வைத்து, எங்களையே முதுகில் குத்தினார். இருந்தபோதும், கட்சியின் நலனுக்காக நடந்ததை மறந்து இணைந்து செயல்பட தயார்.
கூட்டணி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், பழனிசாமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். பழனிசாமி விரைவில் திஹார் ஜெயிலுக்கு செல்வார் என, நான் பேசியது குறித்து, விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம். உரிய நேரத்தில், உரிய இடத்தில் சொல்வேன்.
அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதை வழங்க கோரி, தர்மயுத்தம் நடக்கிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார்.
அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும். அந்த எண்ணத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.