'மணல் திருட்டு விவகாரத்தில் ஆளும் கட்சியினர் தலையீடு': பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
'மணல் திருட்டு விவகாரத்தில் ஆளும் கட்சியினர் தலையீடு': பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
ADDED : நவ 26, 2025 06:11 AM

சென்னை: மணல் திருட்டு விவகாரங்களில், ஆளும் கட்சியினர் தலையீடு உள்ளதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு, அமலாக்கத் துறை மேற்கொண்ட ஆய்வில், 28 குவாரிகளில், 987 ஹெக்டேர் பரப்புக்கு, சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு இருந்ததும், அதன் மதிப்பு 4,730 கோடி ரூபாய் என்றும் தெரியவந்தது. ஆனால், தமிழக அரசுக்கு வெறும் 36 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதாவது, 4,700 கோடி ரூபாய் அளவுக்கு, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது, அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதப்பட்டது; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், கரூர் மாவட்டம், அமராவதி ஆற்று பள்ளத்தாக்கி, மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரங்களில் எந்த தொந்தரவும் இன்றி மணல் அள்ளப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில், ராஜபுரம், சின்னதாராபுரம், அனைப்பாளையம், கக்காலியூர், பெரிய ஆண்டார்கோவில், கோயம்பள்ளி ஆகிய பகுதிகளில், மணல் திருட்டு அமோகமாக நடக்கிறது; இந்த மணல் திருட்டை காவல் துறை, வருவாய் துறை கண்டுகொள்வதில்லை. இதில் இருந்தே, ஆளும் கட்சியினரின் தலையீடு இருக்கிறது என்பது தெளிவாகிறது. இது, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

