தி.மு.க.,விடம் பணம் வாங்கிய கட்சிகள்: மாநாட்டில் அம்பலப்படுத்திய முத்தரசன்
தி.மு.க.,விடம் பணம் வாங்கிய கட்சிகள்: மாநாட்டில் அம்பலப்படுத்திய முத்தரசன்
UPDATED : ஆக 22, 2025 07:09 AM
ADDED : ஆக 22, 2025 01:24 AM

சென்னை: சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், தி.மு.க.,விடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகளை பட்டியலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தல் பணிகளுக்காக, இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா 15 கோடி ரூபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாய் வழங்கியதாக, தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., தெரிவித்தது.
தர்ம சங்கடம் அப்போது இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எளிமை, நேர்மைக்கு பெயர் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் செலவுக்கு 25 கோடி ரூபாய் வாங்கியது, கம்யூனிஸ்ட் தொண்டர்களையே அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனால், நிர்வாகிகளுக்கும் தர்ம சங்கடம் ஏற்பட்டது. தி.மு.க.,விடம் பணம் வாங்கியது குறித்து, இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், தமிழகம் முழுதும் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'உண்டியல் குலுக்கி வசூலித்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட்கள், இன்று அறிவாலயத்தில் பணம் பெற்று கட்சி நடத்துகின்றனர்' என மிகக் கடுமையாக விமர்சித்தார்.
போகும் இடங்கள் தோறும், பழனிசாமி இதே கருத்தை வைத்து பேச, கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பழனிசாமியின் கருத்துக்கு, சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் விளக்கம் அளிப்பது போல பேசினார், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன்.
அவர் பேசியதாவது: 2019 லோக்சபா தேர்தல் செலவுகளுக்கு, தி.மு.க., பணம் கொடுத்தது. ஆனால், கையில் பணத்தை கொடுக்கவில்லை; நள்ளிரவில், திரைமறைவில் கொடுக்கவில்லை.
தி.மு.க.,வின் வங்கி கணக்கிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.
அதிருப்தி எங்களுக்கு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., - வி.சி., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் தி.மு.க., பணம் கொடுத்தது.
இவ்வாறு அவர் பட்டியல் வாசித்து பேசினார்.
இதுவரை ம.தி.மு.க., - வி.சி., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு, தி.மு.க., பணம் கொடுத்த தகவல் வெளியாகாத நிலையில், உண்மையை போட்டு உடைத்து விட்டாரே என, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

