தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/உச்சம் தொடும் காய்கறி விலை! சாகுபடி பரப்பு குறைய காரணம் என்ன?

உச்சம் தொடும் காய்கறி விலை! சாகுபடி பரப்பு குறைய காரணம் என்ன?

உச்சம் தொடும் காய்கறி விலை! சாகுபடி பரப்பு குறைய காரணம் என்ன?


ADDED : ஜூன் 01, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : 'உழவர் நலத்துறையில் யதார்த்த கள நிலவரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாதது தான், காய்கறி சாகுபடி குறைவதற்கான காரணம்' என, துறை அலுவலர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் காய்கறி சாகுபடி குறைந்ததால் கறிவேப்பில்லை துவங்கி, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு என, அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மக்கள், கிராம் கணக்கில், காய்கறிகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணம் குறித்து, வேளாண், தோட்டக்கலை துறையில் பணியாற்றும் கள அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை, உயிர் உரங்கள் உற்பத்தி நிலையம், மண் பரிசோதனை நிலையம், விதை சான்றளிப்பு துறை, உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தரக்கட்டுப்பாட்டு பூச்சி மருந்தக ஆய்வு துறை, உழவர் பயிற்சி நிலையம், பயிர்க்காப்பீடு துறை என ஏராளமான துறைகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும், 'உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்' என்ற பதவியில், 5 முதல் 6 களப்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தான் விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகின்றனர்.

அரசின் நலத்திட்டங்களை நேரடியாக கொண்டு சென்று சேர்க்கின்றனர். அந்த அடிப்படையில், களப்பணியாளர்களுக்கு தான் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அரசின் நலத்திட்டங்கள் விவசாயிகளை முழு அளவில் சென்றடைகிறதா, அதில் உள்ள சிக்கல், ஆண்டுக்காண்டு விவசாய பரப்பு உயர்கிறதா, குறைகிறதா என்பது போன்ற விபரம் தெரியும்.

தரிசாகும் விளைநிலம்


அதன்படி, ஆண்டுக்கு, 5 முதல், 10 சதவீதம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது என்பது தான் யதார்த்த நிலை. அதற்கு காரணம், தற்போதுள்ள விவசாயிகளின் வாரிசுகள் விவசாயத் தொழிலில் ஈடுபட முன்வருவதில்லை; அந்நிலத்தை பயன்படுத்தாமல், தரிசு நிலமாகவே வைத்து, பின் வீட்டுமனை நிலமாக வகை மாற்றம் செய்து, பெரும் தொகைக்கு விற்று விடுகின்றனர்.

குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர்உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், விவசாய நிலங்களாக இருந்து வகை மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் பெரும் தொகைக்கு விற்கப்படுகின்றன.

மறைக்கப்படும் உண்மை


வருவாய்த்துறை சார்பில், ஒவ்வொரு வட்டார அளவிலும் சாகுபடி பரப்பு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த புள்ளிவிபர அடிப்படையில் தான், வேளாண் துறை சார்ந்த பட்ஜெட் தயாரிக்கப்படும் நிலையில், யதார்த்த கள நிலவரத்தை, துறை செயலர், அமைச்சர்களின் கவனத்துக்கு, உயரதிகாரிகள் கொண்டு செல்வதில்லை.

வேளாண், தோட்டக்கலை துறைக்கு, அரசு பல லட்சம் கோடி ரூபாய் நிதியை ஆண்டுதோறும் ஒதுக்குகிறது. ஆனால், அறிவிக்கப்படும் திட்டங்களில் உள்ள குறைகள், திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் உள்ள நெருக்கடி, சிரமங்கள் அரசின் கவனத்துக்கு உயரதிகாரிகளால் கொண்டு செல்லப்படுவதில்லை.

இதுபோன்ற காரணங்கள் தான் காய்கறி விளைச்சல் குறைந்து விலை உயர காரணம். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் களப்பணியில் ஈடுபடும் அலுலர்களின் கருத்துக்களையும் அரசு கேட்க வேண்டும் இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அறிவிக்கப்படும் திட்டங்களில் உள்ள குறைகள், திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் உள்ள நெருக்கடி, சிரமங்கள் அரசின் கவனத்துக்கு உயரதிகாரிகளால் கொண்டு செல்லப்படுவதில்லை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us