புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; பரிசோதனை விரிவுபடுத்த திட்டம்
புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; பரிசோதனை விரிவுபடுத்த திட்டம்
ADDED : அக் 13, 2024 03:34 AM

திருப்பூர்: வளர்ந்து வரும் தொழில் நகரங்களில், புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், புற்றுநோய் பரிசோதனையை விரிவுபடுத்த, மருத்துவப்பணிகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக மருத்துவத்துறை சார்பில் ஆண்டு தோறும் புற்றுநோய் பாதித்தோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 'வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பது, கடந்த, 2018ல் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டது.
இதில் சென்னை முதலிடம், கோவை இரண்டாமிடம், திருவாரூர் மூன்றாமிடத்தில் உள்ளன. ஈரோடு மாவட்டம் ஐந்தாமிடம்; திருப்பூர் மாவட்டம், 11வது இடத்தில் உள்ளது. மேலும், 2019 முதல், 2023 வரை மாவட்ட வாரியாக புற்று நோயாளிகளின் எண்ணிக்கை, உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், கடந்த, 11 ஆண்டுகளாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், கடந்த, 2012ல், 53 ஆயிரத்து 22 பேர் (ஆண்கள் 23,124; பெண்கள், 29,898 பேர்) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது, 2023ல், 92 ஆயிரத்து 875 பேர் (ஆண்கள் 42,912, பெண்கள், 49, 963 பேர்) என அதிகரித்துள்ளது என்கிறது புள்ளிவிவரம்.
சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
அடுத்தாண்டு, 2025ல், இந்தியாவில், 10 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்ப பை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாதம் முழுக்க மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை துவக்கத்திலேயே குணப்படுத்தி விட முடியும் என்பதால், பெண்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களுக்கும் புற்றுநோய் அறிகுறி கண்டறிதல் தொடர்பான பயிற்சி வழங்கி, சுகாதார நிலையங்களுக்கு வரும் பெண்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.