தானியங்கி இயந்திரம் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்ய திட்டம்!
தானியங்கி இயந்திரம் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்ய திட்டம்!
ADDED : ஜூலை 15, 2026 06:12 AM

சென்னை: பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்வதற்கு பதிலாக, தானியங்கி இயந்திரம் வழியே, பால் விற்பனை செய்யும் திட்டம், சோதனை அடிப்படையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் செயல்படுத்தப்பட உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, பால் விநியோகிக்க, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக, மாற்று வழியை கண்டறிய உத்தரவிட்டது.
அதன்படி, ஆவின் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை: ஆவின் பால் விநியோகத்துக்கு, மீண்டும் தானியங்கி விற்பனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை அடிப்படையில், கொடைக்கானல், ஊட்டி நகரங்களில், மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில், அந்த இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, தனியார் நிறுவனத்திடம் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
இயந்திரங்களை நிறுவ, உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இயந்திரங்களை வைத்த பின், அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு, பாக்கெட்டுகளில் பால் வினியோகிக்க கூடாது என, மொத்த விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. இயந்திரங்களை அமைத்த பின், பாக்கெட்டுகளில் பால் விற்பனை நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
