மோட்டார் வாகன தொழில் முனைவோருடன் பிரதமர் சந்திப்பு
மோட்டார் வாகன தொழில் முனைவோருடன் பிரதமர் சந்திப்பு
UPDATED : பிப் 24, 2024 05:54 AM
ADDED : பிப் 24, 2024 04:22 AM

மதுரை: பிப்., 27ல் மதுரை வரும் பிரதமர் மோடி, மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் தளத்தை துவக்கி வைக்கிறார். தொழில்துறை தொடர்பான வளர்ச்சி கூட்டத்தில் மதுரையில் நாட்டின் பிரதமரே பங்கேற்பது இது முதன்முறை.
பிப்., 27 மாலை பிரதமர் நரேந்திரமோடி பல்லடத்தில் இருந்து ெஹலிகாப்டரில் மதுரை வருகிறார். சிவகங்கை ரோடு வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் மாலை 5:15 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு குறுந்தொழில் முனைவோரிடையே உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் டி.வி.எஸ்., மொபிலிட்டி அமைப்பின் டிஜிட்டல் தளம், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் டி.வி.எஸ்., மொபிலிட்டி சென்டர் பார் எக்சலன்ஸ் என்ற அமைப்பும் துவக்கப்பட உள்ளது.
பிரதமர் வருகையை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். மருத்துவத்துறை உட்பட அனைத்து துறைகளும் தயார் படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை பகுதியில் மோட்டார் வாகனம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் அதிகளவில் உள்ளனர். இவர்களில் சாதாரண ஒர்க் ஷாப் முதல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை உட்பட பலர் ஒருங்கிணைப்பு இன்றி சிதறி கிடக்கின்றனர்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தொழிலில் உள்ளோரை ஒருங்கிணைத்து தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியே இந்த தொழில் முனைவோர் சந்திப்பு. ஒரு மணி நேரம் நடைபெறும் இக்கூட்டத்தில் சிறு, குறுந்தொழில் முனைவோர் பலர் பங்கேற்க உள்ளனர். அவர்களிடம் பிரதமர் பேசுகிறார். மாலை 6:15 மணிக்கு கூட்டம் நிறைவடைந்ததும், பசுமலை தாஜ் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் அதிகளவில் தமிழகம் வந்துள்ளார். பல முறை மதுரை வந்துள்ளார். தற்போது சிறு குறுந்தொழில் முனைவோருடன் கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார். பிரதமர் அளவில் இதுபோன்ற தொழில்சார்ந்த நிகழ்வு மதுரையில் நடப்பது இதுவே முதன்முறை. மன்மோகன் சிங் உட்பட இதற்கு முன்பிருந்த பிரதமர்கள் பலரும் ஏதாவது திட்டத்தை துவக்கி வைக்க ஓரிரு முறை தமிழகம் வந்துள்ளனரே தவிர, இதுபோன்ற தொழில் மேம்பாட்டு நிகழ்வுகளில் மதுரையில் பங்கேற்றதில்லை.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகமில்லை. பிரதமரின் இந்த வருகையை தென்மாவட்ட தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் மதுரையில் நடக்க வேண்டும் என வர்த்தகர்கள் முதல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரை பலரும் விருப்பம் தெரிவித்தனர். என்ன காரணத்தாலோ அது நிறைவேறாமலே போனது. தற்போது பிரதமரே தொழில் முனைவோர் குறித்த கூட்டத்திற்கு வருவதால், இந்திய அளவில் தொழில் துறையில் மதுரை கவனம் பெறும்.

