தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமானையும் கைது செய்த போலீசார்

போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமானையும் கைது செய்த போலீசார்

போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமானையும் கைது செய்த போலீசார்


ADDED : பிப் 12, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்க, நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் வருவதை அறிந்து, போலீசார் வேகமாக அவர்களை கைது செய்தனர். அங்கு வந்த சீமானையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அரை மணி நேரத்திற்கு பின், போலீசார் அவரை பாதியில் இறக்கி விட்டனர்.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி முதல், வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

நேற்று பத்தாம் நாளாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், சங்கத் தலைவர் ஜெகதீஸ்வரி தலைமையில், 800க்கும் அதிகமான பணியாளர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, நா.த.க., ஒருங்கினைப்பாளர் சீமான் வருவதாக தகவல் வெளியானது. உடனே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர். அவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது, சீமான் அங்கு வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து விட்டோம் என போலீசார் கூற, அவர்களோடு நானும் கைதாகிறேன் எனக் கூற, சீமானையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். வாகனம், சென்னையின் பல்வேறு வீதிகளை சுற்றி, அரை மணி நேரத்திற்கு பின், மீண்டும் வள்ளுவர் கோட்டம் வந்தது. போலீசார் சீமானை இறக்கி விட, ஊரைச் சுற்றி பார்த்த திருப்தியில் சீமானும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



புறப்படுவதற்கு முன், சீமான் அளித்த பேட்டி: போராட்டம் துவங்கிய நாளில் இருந்து, இங்கு வர வேண்டும் என முயற்சித்தேன். இன்று நான் வருவது தெரிந்ததும், போலீசார் அவர்களை கைது செய்தனர். அதை கண்டித்ததும், போலீசார் என்னையும் கைது செய்வதாக சொன்னார்கள். போலீஸ் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். யாருடைய கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவில்லை. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கதான் போராட்டக்காரர்களுடன் இணைந்து போராடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் ஒத்திவைப்பு


சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி உட்பட, பல்வேறு மாவட்டங்களில், போராட்டத்தில் ஈடுபட்ட, ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை, அரசு பணி நீக்கம் செய்து வருகிறது. இதையடுத்து, 'பணியாளர்களின் நலன் கருதி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்' என, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us