ஊடக துறையினருக்கு தபால் ஓட்டு; லோக்சபா தேர்தலிலும் அறிமுகம்
ஊடக துறையினருக்கு தபால் ஓட்டு; லோக்சபா தேர்தலிலும் அறிமுகம்
UPDATED : மார் 20, 2024 02:31 AM
ADDED : மார் 20, 2024 01:21 AM

வரும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது, தபால் வாயிலாக ஓட்டளிக்கும் அத்தியாவசிய பணியாளர்களின் வகையை தேர்தல் கமிஷன் விரிவுபடுத்தி உள்ளது.
லோக்சபா, நான்கு சட்டசபை மற்றும் 13 மாநிலங்களில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்., 19ல் துவங்கி ஜூன் 1 வரை நடக்கிறது.
ஓட்டுப்பதிவு நாளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், தபால் வாயிலாக ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து வருகிறது.
இந்த பட்டியல், சிறப்பு வாக்காளர்கள், சேவை வாக்காளர்கள், தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் தடுப்பு காவலில் உள்ள வாக்காளர்கள் என, நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஊடகத்துறையினர், சட்டசபை தேர்தல்களில் மட்டும் தபால் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் அனுமதித்து வந்தது. தற்போது முதன்முறையாக லோக்சபா தேர்தலிலும் ஊடகத்துறையினருக்கு தபால் ஓட்டளிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் இருந்து ஏழு வகையான பணிகளில் ஈடுபடுவோர் அத்தியாவசிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி, வணிக கப்பல், பி.எஸ்.என்.எல்., சென்னை மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மாநில அரசு பணியாளர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊடக பணியாளர்கள் இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு நாளில் தேர்தல் பணியில் ஈடுபடு வதற்கான தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ கடிதம் வைத்துள்ள ஊடகத்துறையினர் தபால் வாயிலாக ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

