விஜயை சந்தித்ததில் தவறில்லை: தி.மு.க.,வை கடுப்பேற்றும் பிரவீன்
விஜயை சந்தித்ததில் தவறில்லை: தி.மு.க.,வை கடுப்பேற்றும் பிரவீன்
UPDATED : ஜன 08, 2026 03:09 AM
ADDED : ஜன 08, 2026 01:26 AM

கோவை: ''த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்தது தவறில்லை,'' என, காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தின் கடன் சுமை குறித்த என் கருத்து, ரிசர்வ் வங்கி அறிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லை.
காங்., கட்சி தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அதனாலேயே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறோம். கட்சியும் பலவீனமாக உள்ளது. பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதால், காங்., தொண்டர்கள் பல கோரிக்கைகளை வைக்கின்றனர்.
கட்சியில் இருக்கும் சில எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு வழக்கு வம்புகள் உள்ளன. இப்படிப்பட்ட தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர்கள், ஊட்டி விடும் கைகளை தட்டிவிட தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்தெல்லாம் காங்., தொண்டனுக்கு கவலையில்லை. கட்சியின் எதிர்காலமே முக்கியம். அதற்காக அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் தேவையானவை தான்.
காங்., தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். ஆனால், முடிவெடுப்பது தலைமை தான். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்தது உண்மை தான். அவரை, தனிப்பட்ட முறையில் தான் சந்தித்தேன்; அதில் தவறில்லை. விஜய் கூட்டங்களுக்கு, மக்கள் உற்சாகமாக வருகின்றனர்.
அக்கூட்டம் அனைத்தும், ஓட்டுகளாக மாறுமா என கேள்வி எழுப்பப்படுகிறது. தற்போது விஜயை நடிகராக பார்க்காமல், அரசியல் தலைவராக மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

