தரமான குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல்; 23 ஆண்டுகளாக டேங்க் ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலி
தரமான குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல்; 23 ஆண்டுகளாக டேங்க் ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலி
ADDED : அக் 24, 2024 01:24 AM

திருவாலங்காடு : தமிழகத்தில் 30,000க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தனி இணைப்பு வழங்கி, குடிநீர் தேவையில் தன்னிறைவு பெறச் செய்ததில், தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 'ஜல் ஜீவன்' திட்டத்தை சிறப்பாக கையாண்டதாக பாராட்ட பெற்றது.
தற்போது, தமிழக கிராம ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு நீர் வழங்க, தேவையான பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பாதிப்பு
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி உட்பட 14 ஒன்றியங்களில், 525 ஊராட்சிகள் உள்ளன.
இங்கு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, 1,500க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு, மக்களுக்கு குடிநீர்வினியோகிக்கப்படுகிறது. அந்தந்த ஊராட்சி நிர்வாகம் தொட்டிகளை பராமரித்து வருகின்றன.
இந்நிலையில், ஒருசில கிராமங்களில் மட்டுமே அரசால் நியமிக்கப்பட்ட டேங்க் ஆப்பரேட்டர்கள் பணியில் உள்ளனர். மற்ற ஊராட்சிகளில், ஊராட்சி நிர்வாகம் நியமித்து பராமரித்து வருகிறது.
இப்பணிக்கு குறைந்தளவு ஊதியம் என்பதால், பணியாளர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை. இதனால், கிராம பகுதிகளில் குறித்த நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்வது மற்றும் தொட்டியை சுத்தம் செய்யும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது.
சில ஊராட்சிகளில் பணியாளர் இல்லாததால், பல மாதங்களாக தொட்டிகள் சுத்தம் செய்யாமல் சுகாதாரமற்ற குடிநீரை வினியோகிக்கும் நிலை உள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வீண்
தற்போது மாவட்டம் முழுதும் 800க்கும் மேற்பட்ட குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி துறை அதிகாரி கூறியதாவது:
கடந்த 200௧ம் ஆண்டுக்கு பின் டேங்க் ஆப்பரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளன. பணியில் குறைந்தளவு ஊதியம் என்பதால், பணியாளர்கள் சேர விரும்புவதில்லை. இதனால், பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
எனவே, குறித்த நேரத்தில் குடிநீர் வழங்குவது, மோட்டாரை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், குடிநீர் வீணாவதாக புகார்கள் வருகின்றன.
முதியவர்கள், பெண்கள் பல கிராமங்களில் டேங்க் ஆப்பரேட்டர்களாக பணியாற்றுகின்றனர். இதனால், தொட்டிகளை சுத்தம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதை உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொற்ப சம்பளம்
தற்காலிக ஊழியர்களால் நீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டாலும், பல ஊராட்சிகளில் 'டேங்க் ஆப்பரேட்டர்' பற்றாக்குறை உள்ளது
இவர்களுக்கு, அரசின் சார்பில் 4,850 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழலுக்கு இது எவ்வாறு உதவும். மேலும், ஊராட்சிகள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, 2,500 முதல், 3,000 ரூபாய் வரை மட்டுமே ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பளம் வழங்குகின்றனர். அதையும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வழங்கப்படுகிறது.
- கே.பொன்ராஜ்,
டேங்க் ஆப்பரேட்டர்,