ADDED : மார் 06, 2024 04:44 AM

ஹிந்து மதத்தையும் கடவுளையும் அவதுாறாக பேசும் வழக்கம் கொண்ட தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா இப்போது ஒருபடி மேலே சென்று, இந்தியா ஒரு நாடே இல்லை என்றும், ராமருக்கு தி.மு.க.,வினர் எதிரிகள் என்றும் பேசி பெரும் பிரச்னையை துாண்டியிருக்கிறார்.
ராஜாவின் பேச்சு நாடெங்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க.,வினரின் வெறுப்பு பேச்சுகள் தொடர்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் மகனும், தமிழக அமைச்சருமான உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். சுப்ரீம் கோர்ட்டே அதற்காக அவரை கண்டித்துள்ளது. ஆனால், அதன் பிறகும் அக்கட்சியின் முக்கிய தலைவரான ராஜா, இந்து கடவுளையும் இந்த நாட்டையும் அவதுாறாக பேசியிருக்கிறார்.
இந்தியா ஒரு நாடே அல்ல என்றும், ராமருக்கு தாங்கள் எதிரிகள் என்றும் பேசியுள்ளார். அவருடைய பேச்சை 'இண்டியா' கூட்டணி ஏற்றுக் கொள்கிறதா என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ராகுலின் மவுனம், அவர் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதையே உணர்த்துகிறது. இவ்வாறு அமித் மாளவியா கூறியுள்ளார். அத்துடன், ராஜாவின் பேச்சையும் அவர் பதிவு செய்துள்ளார்.
சோனியாவும் ராகுலும் பிரியங்காவும் கார்கேயும் ராஜாவின் பேச்சு குறித்து நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
ராஜாவின் பேச்சு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. வரும் தேர்தலில் கூட்டணிக்கு வரக்கூடிய ஓட்டுகளையும் தி.மு.க., சுத்தமாக காலி செய்துவிடும் போலிருக்கிறதே என அவர்கள் பீதி அடைந்துஉள்ளனர். எனினும், பெரிய தலைவர்கள் எவரும் உடனடியாக இது குறித்து கருத்து சொல்லவில்லை.
காங்கிரஸ் கட்சியின் ஜூனியர் நிர்வாகி ஒருவர் வாயிலாக அக்கட்சி தீயணைப்பு முயற்சியை துவக்கியிருக்கிறது. கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் கூறியதாவது: ராஜாவின் பேச்சை, 100 சதவீதம் ஏற்க மாட்டேன். கடவுள் ராமர், எல்லாருக்குமானவர். மதம், இனம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர், ராமர். சிறந்த வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக திகழ்பவர். ராமர் என்றால், அன்பு, நேர்மை. ராஜாவின் பேச்சை முழுமையாக கண்டிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

