அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் வழக்கு
அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் வழக்கு
UPDATED : ஆக 07, 2025 05:59 AM
ADDED : ஆக 07, 2025 03:20 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலர் முரளி சங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க.,வில் தந்தை, மகன் இடையிலான மோதல், பிரிவை நோக்கி சென்றுள்ளது. ராமதாஸ், அன்புமணி தரப்பில், தனித்தனியே கட்சி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
பதவி காலம் நிறைவு இந்நிலையில், அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, ராமதாஸ் நியமித்த மாநில பொதுச்செயலர் முரளி சங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனு விபரம்:
கடந்த 2022ம் ஆண்டு மே 28ல், கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவி காலம், கடந்த மே 28ல் நிறைவு பெற்றுள்ளது.
கட்சியின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மே 30ம் தேதியில் இருந்து, தலைவராக செயல்பட்டு வருகிறார். மாநிலத் தலைவரின் பதவி காலம் முடிவடைந்தால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், கட்சி நிர்வாக பொறுப்பும், கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என, ஜூலை 7ம் தேதி நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. கட்சி விதிகளும் திருத்தப்பட்டு விட்டன.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட, கட்சியின் நிறுவனருக்கு தான் அதிகாரம் உள்ளது. அன்புமணி தற்போது கட்சி தலைவர் இல்லை.
அவ்வாறு இருக்கும் போது, நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அனுமதியின்றி, அரசியல் ரீதியில் பல்வேறு கூட்டங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி, கட்சிக்கு அவப்பெயர், குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். தன்னைத் தானே தலைவர் என சொல்லிக் கொண்டு, அன்புமணி செயல்படுகிறார்.
டி.ஜி.பி.,யிடம் புகார் கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாசின் அனுமதியின்றி, அன்புமணி 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிராக, டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கட்சி பொதுக்குழு கூட்டம், வரும் 9ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கும் என, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளார்.
அன்புமணியின் இந்த அறிவிப்பால், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

