அன்புமணிக்கு நெருக்கடி தரும் ராமதாஸ்: பூம்புகார் மாநாட்டில் பலத்தை காட்ட திட்டம்
அன்புமணிக்கு நெருக்கடி தரும் ராமதாஸ்: பூம்புகார் மாநாட்டில் பலத்தை காட்ட திட்டம்
ADDED : ஜூலை 31, 2025 03:59 AM

திண்டிவனம்: மகளிர் மாநாட்டில், லட்சக்கணக்கில் மக்களை திரட்டி, அன்புமணிக்கு தன் பலத்தை நிரூபிக்க பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் தரப்பு கூறியதாவது:
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து, இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அமரும் இருக்கை அருகே ஒட்டு கேட்கும் கருவி இருந்த விவகாரம் பூதாகரமாகி, சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அன்புமணி துவக்கிய நடைபயணத்துக்கு எதிராக டி.ஜி.பி., தமிழக உள்துறை செயலர் என ராமதாஸ் சார்பில் புகார் தரப்பட்டு, அன்புமணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார் ராமதாஸ். இதனால், நடைபயணத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு கூட்டத்தை திரட்ட முடியாமல் அன்புமணி அப்செட் ஆகி உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, பா.ம.க.,வினர் தன் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் ராமதாஸ் இறங்கி உள்ளார்.
ஆக.,10ல் பூம்புகாரில் நடைபெறும், 'வன்னியர் மகளிர் பெருவிழா' மாநாட்டில் லட்சக்கணக்கானோரை திரட்டி, பலத்தை காட்ட திட்டமிட்டு உள்ளார்.
கட்சியின் மாநில நிர்வாகிகள், அணி செயலர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் மாநாட்டு பணிகளை ராமதாஸ் பிரித்து கொடுத்துள்ளார். அவர்கள் தமிழகம் முழுதும், கிராமங்கள் வரை நேரடியாக சென்று, வன்னியர்களை திரட்டும் வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.