ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு பதவி; பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை
ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு பதவி; பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை
ADDED : ஜூலை 16, 2026 05:59 AM

சென்னை: ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு, கட்சியில் பதவி வழங்குவது குறித்து, பா.ம.க., மாவட்ட செயலர்களுடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் தனித்தனியே கட்சி நிர்வாகிகளை நியமித்தனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின், இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பை, அன்புமணியிடம் ராமதாஸ் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், பா.ம.க., 38ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலர்களுடன் அன்புமணி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி செயலர்களில், யார் யாருக்கு கட்சியில் பதவி கொடுப்பது என்பது குறித்து, மாவட்ட செயலர்களிடம் அன்புமணி கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அன்புமணி, 'இப்போது நாம் ஒன்றாகி விட்டோம்; கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
கட்சியின் 38ம் ஆண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாட வேண்டும். அனைத்து கிராமங்களிலும், கட்சி கொடியேற்ற வேண்டும்' என அறிவுறுத்தியதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து, ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் இன்று அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.
