ADDED : பிப் 27, 2024 01:31 AM

சென்னை: 'அடுக்குமாடி குடியிருப்பு வீடு விற்பனை பதிவுக்காக அறிவிக்கப்பட்ட கூட்டு மதிப்பு தொடர்பான பிரச்னையால், வீடு வாங்குவோருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என, பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் ரவிரஞ்சன் தெரிவித்தார்.
சென்னையில் கிரெடாய் அமைப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாடு முழுதும் வீடு, மனை வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, வீடு வாங்குபவர்களில், 92 சதவீதம் பேர் வீட்டுக் கடனையே நம்பி உள்ளனர்.
இதனால், வங்கிகள் மக்களுக்கு வீட்டுக்கடன் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. நாடு முழுதும், ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வீட்டுக்கடனாக வழங்கப்படுகிறது. தமிழகம், புதுசேரியில் மட்டும் இது, 65,000 கோடி ரூபாயாக உள்ளது. வழக்கமான வங்கி சேவைகளுடன் வீட்டுக்கடன் வழங்கும் பணிகளும், எஸ்.பி.ஐ., கிளைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன், வீட்டுக்கடன் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சிறப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு மையங்கள் வாயிலாக, மாதந்தோறும் 4,000 மேற்பட்ட கோப்புகள் பைசல் செய்யப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மூன்று அல்லது நான்கு வேலை நாட்களில், வீட்டுக்கடன் கோப்புகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிப்பது குறித்த விவகாரம், வீடு வாங்குவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு தலையிட்டு, இந்த பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் திட்டமிட்டபடி, வீடு வாங்கும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
