தமிழர்களின் பாரம்பரியத்துக்கு பார்லிமென்டில் மரியாதை! ஜனாதிபதி முன்பாக ஏந்தி செல்லப்பட்ட செங்கோல்
தமிழர்களின் பாரம்பரியத்துக்கு பார்லிமென்டில் மரியாதை! ஜனாதிபதி முன்பாக ஏந்தி செல்லப்பட்ட செங்கோல்
ADDED : ஜூன் 28, 2024 02:01 AM

பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தபோது, அவருக்கு முன்னதாக பார்லி., அதிகாரி ஒருவர் செங்கோலை ஏந்தியபடி சென்றார்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தபின் புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் ஆகியவை நடந்து முடிந்த நிலையில், பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.
இதில், உரை நிகழ்த்துவதற்காக, ஜனாதிபதி மாளிகையிலிருந்து கிளம்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, குதிரைப்படை அணிவகுக்க, பார்லிமென்ட் வளாகத்திற்குள் வந்தார்.
அங்கு கஜ் திவார் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய நீருற்று குளத்தின் முன் இருந்த, சிறிய மேடை மீது ஏறி நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தேசிய கீதம்
இதன்பின் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் புடைசூழ பார்லிமென்ட்டிற்குள் நுழைந்தார்.
அதற்கு முன்பாகவே, லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டிருந்த தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான செங்கோலை எடுத்து வந்து, கைகளில் ஏந்தியபடி ஒரு அதிகாரி ஜனாதிபதிக்கு முன் நடக்க, அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோர் சென்றனர்.
சபைக்குள் நுழைந்ததும் அனைவரையும் வணங்கியபடியே, மேடை மீது உள்ள தன் நாற்காலிக்கு சென்றார். அவருடன் சென்ற துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோர் இருபுறமும் நின்றனர்.
இவர்கள் மேடை ஏறுவதற்கு முன்பாகவே, செங்கோலை எடுத்துக் கொண்டு முன் சென்ற அந்த அதிகாரி, மேடையின் கீழ் உள்ள செக்ரட்ரி ஜெனரலின் மேஜைக்கு கீழ், அதை சொருகி நிலைநிறுத்தி வைத்தார்.
மேடை மீதிருந்த ஜனாதிபதிக்கு சரியாக நேர் முன்பாக அந்த செங்கோல் கீழே நின்று கொண்டிருக்க, தேசிய கீதத்துடன் அலுவல்கள் துவங்கின.
தன் உரையை நிகழ்த்தி முடிந்ததும், அதே செங்கோலை எடுத்துக் கொண்டு அதிகாரி முன் செல்ல, ஜனாதிபதி உள்ளிட்டோர் சபையை விட்டு வெளியே சென்றனர்.
எல்லாம் முடிந்ததும், அந்த செங்கோலை எடுத்துச் சென்ற அதிகாரி மீண்டும் அதேபோல கைகளில் துாக்கியபடியே நடந்து வந்து மேடை மீது ஏறி, சபாநாயகர் இருக்கை அருகே எப்போதும் நிறுத்தி வைக்கும் கண்ணாடி கூண்டுக்குள் அந்த செங்கோலை பொருத்திவிட்டார்.
சாதனைக்குரியது
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதாவது:
லோக்சபா தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. 64 கோடி பேர் ஓட்டளித்தது மட்டு மல்லாது, ஜம்மு -- காஷ்மீரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் அதிக அளவில் ஓட்டளித்தது சாதனைக்குரியது
மத்தியில் நிலையான அரசை மக்கள் தந்துள்ளனர். இந்த தேர்தல் முடிவில் பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சி அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் இது நடந்துள்ளது.
அரசின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவே இதை கருத வேண்டியுள்ளது. சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் நிறைவு அடையும் இந்த அமிர்த காலத்தில் அமைந்துள்ள இந்த 18வது லோக்சபா, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கும்
பிரதமரின் கிஸான் சம்மான் திட்டத்தின் கீழ், மூன்று லட்சத்து 20,000 கோடி ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு முழுமையாக தரப்பட்டுள்ளது
ஆமதாபாத் - மும்பை இடையிலான அதிவேக புல்லட் ரயிலைப் போலவே, நாட்டின் தெற்கு, கிழக்கு,வடக்கு பகுதிகளில் புல்லட் ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும்
நாட்டில், 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், அவர்கள் இலவச சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
ஐ.ஐ.டி., -- ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வரும் அதே வேளையில், விரைவில் டிஜிட்டல் பல்கலை ஒன்றை துவங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது
கடந்த 1975 ஜுன் 25ல், நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு அரசியலமைப்பு சட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலை மாறி, தற்போது மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன
நவம்பர் 26ம் தேதியை, அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடுவது மட்டுமல்லாது, 370வது பிரிவை நீக்கியதன் வாயிலாக அரசியலமைப்பு சட்டம் முழுமை பெற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் நடந்த தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் அரசு உறுதி எடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்
- நமது டில்லி நிருபர் -.