ADDED : செப் 03, 2026 06:05 AM

என்ன தான் ரோபோக்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கினாலும், அவை மனிதர்களை போல சிந்தித்து செயல்படாது என்பது தான் அறிவியல் உண்மை. அதை கேள்விக்கு உட்படுத்துவது போன்ற சம்பவம், ரஷ்யாவில் நடந்திருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு வந்த வாடிக்கையாளர், அங்கு நின்றிருந்த ரோபோவை பிடித்து லேசாக பின்னுக்கு தள்ளினார். பதிலுக்கு அந்த ரோபோ, 'கிக் பாக்ஸிங்' வீரரை போல சண்டைக்கு தயாரானது. தள்ளி விட்டவரை, காலால் எட்டி உதைக்கவும் முற்பட்டது.
அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளரும், ஊழியரும் ரோபோவை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்களால் முடியவில்லை. அவர்களது பிடியில் இருந்து திமிறிய ரோபோ, வாடிக்கையாளரை நோக்கி தாக்குதலுக்கு முன்னேறியது. ஏதேனும் விபரீதம் செய்து விடும் என்று பயந்த கடை உரிமையாளர், அதன் பேட்டரியை, 'ஆப்' செய்தார். நெட்டிசன்களின் கேலி, கிண்டலான, 'கமென்ட்'களுடன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. யாரோ ஒருவர், ரோபோவை 'ரிமோட்'டில் இயக்கியிருக்கலாம் என்றும் சிலர் கமென்ட் செய்கின்றனர்.
இணையத்தை வென்ற நடனம்
க ல்லுாரி கலை விழாக்களில் மாணவ -- மாணவியர் நடனம் என்பது வழக்கமான ஒன்று தான். பேராசிரியர் நடனம் ஆடினால் எதிர்வினைகள் எப்படியிருக்கும்? மும்பை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில், வேதியியல் துறை தலைவரான பேராசிரியை ருச்சி ஆனந்த் ஆடிய நடனம், இணையத்தை தெறிக்க விட்டது. 
ஐ.ஐ.டி., கான்பூரில் பட்டப்படிப்பும், அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் பிஎச்.டி.,யும் முடித்தவரான ருச்சி ஆனந்த், ஆராய்ச்சி, பயிற்றுவித்தல் பணிகளுக்கு இடையே நாட்டியத்திலும் இத்தகைய திறனுடன் இருப்பதை கண்ட நெட்டிசன்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
பஞ்ச் குரங்குக்கு என்னாச்சு!
ஜப்பான் இச்சிகாவா உயிரியல் பூங்காவில், பஞ்ச் என்ற குரங்கு குட்டி, தாயால் கைவிடப்பட்ட நிலையில், பொம்மையை இழுத்துக்கொண்டு சுற்றிய வீடியோ, சில மாதம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குரங்கை பார்க்கவே, தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். 
பூங்காவில் மேம்பாட்டு பணி நடப்பதால், குறிப்பிட்ட அந்த பகுதி மூடியிருப்பதாகவும், குரங்கு நல்ல நிலையில் இருப்பதாகவும், நேரில் பார்த்தவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கண்கலங்க வைத்த சிறுமி
உ .பி., மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி. முதல் வகுப்பில் படிக்கும் இந்த சிறுமி, 6 மாத குழந்தையாக இருந்தபோது நடந்த விபத்தில் ஒரு கால் செயலிழந்து விட்டது. இன்னொரு காலில் மட்டுமே நடந்து பழகிய சிறுமி, ஒற்றைக்காலில் குதித்து குதித்து பள்ளிக்குச் செல்கிறார். 
வந்தாள் மகாலஷ்மியே!
மஹாராஷ்டிரா பீட் மாவட்டத்தில், 200 ஆண்டுக்குப் பின் தங்கள் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை மேள தாளங்கள் முழங்க, சாரட் வண்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்வு, 'டிரெண்ட்' ஆகியுள்ளது. பல தலைமுறைகளாக பெண் குழந்தையே இல்லாமல் குடும்பத்தினர் வாடியிருந்தனர். அவர்களது ஏக்கம் போக்கும் வகையில், அந்த வீட்டு மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.

'பெண் குழந்தை கிடைத்தது மாபெரும் அதிர்ஷ்டம்' என்கிறார், குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிபாலே. குழந்தையின் தந்தை, 'பெண் குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது. பெண் குழந்தைகளே தந்தையுடன் மிகவும் ஒட்டுதலாக இருப்பர். நாங்கள் ஒரு மலரைப் போல எங்கள் மகளை வளர்ப்போம்' என்றார். பெண் குழந்தை பிறப்பை உற்சாகமாக கொண்டாடிய நிகழ்வு இணையத்தில் ஏராளமானோர் பாராட்டைப் பெற்றுள்ளது.
