ADDED : ஜன 14, 2024 01:05 AM

சென்னை: தமிழகத்தை சேர்ந்த முவர் தற்போது கவர்னர்களாக உள்ளனர். இந்த மூன்று அரசியல்வாதிகளும், தமிழக பா.ஜ., தலைவர்களாக இருந்தவர்கள். தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களில், அதிக நேரம் செலவிடுவதில்லை; தமிழகத்தில் தான் அதிகமாக காணப்படுகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில், இந்த மூவரும் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர். ஒரு பக்கம், மத்திய அமைச்சர்கள் வாரந்தோறும் தமிழகம் வருகை தருகின்றனர்; இன்னொரு பக்கம் கவர்னர்கள்…இவர்கள் வருகையால், 'மீடியா'வில் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து காட்டப்படுகின்றன.
கவர்னர்களும், மத்திய அமைச்சர்களும் பா.ஜ.,விற்கு ஆதரவாக செயல்பட்டு வருவது, தி.மு.க.,வினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. தி.மு.க.,வின் சீனியர் எம்.பி., ஒருவர் இது குறித்து மத்திய அரசுக்கு புகார் கடிதமே எழுதி விட்டாராம்.
இந்த கடிதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதப்பட்டது. கடிதத்தைப் படித்த அமித் ஷா, 'இந்த கடிதத்தை பைல் செய்து விடுங்கள்' என, சொல்லி விட்டாராம். அதாவது, 'இதற்கு பதில் போட தேவையில்லை' என, அர்த்தம்.
இந்த மூன்று கவர்னர்களையும், அடிக்கடி தமிழகத்திற்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு, 'அட்வைஸ்' செய்ததே பிரதமர் மோடி தான் என்பது தி.மு.க.,விற்கு தெரிய வாய்ப்பில்லை.

