தடை செய்யப்பட்ட மதுபானங்களை கடைகளில் பறிமுதல் செய்யாதது ஏன்? 'டாஸ்மாக்'கை சுழன்றடிக்கும் புகார்
தடை செய்யப்பட்ட மதுபானங்களை கடைகளில் பறிமுதல் செய்யாதது ஏன்? 'டாஸ்மாக்'கை சுழன்றடிக்கும் புகார்
ADDED : ஆக 19, 2026 04:25 AM

- நமது நிருபர் -
மத்திய உணவு தர நிர்ணய கமிஷன் தடை விதித்தபோதும், அந்த மது வகைகளை கடைகளில் இருந்து பறிமுதல் செய்யாமல், டாஸ்மாக்கில் விற்பனை ஜரூராக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'என்ரிகா என்டர்பிரைசஸ்' தயாரிக்கும் மது வகைகளை ஆய்வு செய்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கமிஷன், அதன் மது வகைகள் குடிக்க உகந்தது இல்லை என கூறியது.
இதையடுத்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், என்ரிகாவின் மது வகைகளை, கடந்த 13ம் தேதி தடை செய்தார். ஆனால், அந்த தடையை மறுநாளே நீக்கவும் செய்தார். இதனால், தரமற்ற மது விற்பனை தற்போதும் தொடர்கிறது.
டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகின்றன. மாதம் சராசரியாக 45 கோடி மது பாட்டில்களை, டாஸ்மாக் கொள்முதல் செய்கிறது. மொத்த கொள்முதலில், என்ரிகா நிறுவனத்திடமிருந்து, 11 சதவீதம், அதாவது மாதம் 4.95 கோடி மது பாட்டில்கள் வாங்கப்படுகின்றன.
16.50 லட்சம்
அதில், தினமும் என்ரிகா நிறுவனத்தின், 16.50 லட்சம் மது பாட்டில்களை, டாஸ்மாக் விற்பனை செய்கிறது. டாஸ்மாக் கொள்கையின்படி, நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் மதுவை, 1-0 மடங்கு வரை இருப்பு வைக்க வேண்டும். அந்த வகையில், என்ரிகா நிறுவனத்தின் மது வகைகள் மட்டும், தமிழகம் முழுதும் 1.65 கோடி பாட்டில்கள் வரை இருப்பு உள்ளன.
தற்போது, மத்திய தர நிர்ணய கமிஷன் ஆய்வின்படி, என்ரிகா மது வகைகள் குடிக்க உகந்தது இல்லை என, டாஸ்மாக் தடை விதித்தது. பின், 24 மணி நேரத்தில் தடை நீக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன.
என்ரிகா நிறுவன மது வகைகளை, டாஸ்மாக் கொள்முதல் செய்யும் முன்பாக, கலால் துறையின் துணை ஆட்சியர் அந்தஸ்து கலால் மேற்பார்வை அலுவலர் ஆய்வு செய்தாரா என சந்தேகம் எழுகிறது.
சென்னை- தடய அறிவியல் துறையின் கலால் பிரிவு ஆய்வகத்தில், இந்த மது வகை சோதனை செய்யப்பட்டதா; சோதனை செய்யாமலேயே அனுப்பினரா அல்லது சோதனை முடிவுகளை மறைத்தனரா என்பது உள்ளிட்ட பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், இவை எதற்குமே டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமாரும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கமிஷனர் கஜலட்சுமியும் விளக்கம் கொடுக்கவில்லை.
கூடுதல் கொள்முதல்
குறிப்பாக, என்ரிகா மது குடிக்க உகந்தது இல்லை என, தர நிர்ணய கமிஷன் தடை விதிக்கும்போதும், அதை கடைகளில் இருந்து, டாஸ்மாக் நிர்வாகம் பறிமுதல் செய்து அழிக்கவில்லை. தரமில்லாத மதுவை கொடுத்ததற்காக, என்ரிகா நிறுவனத்துக்கு அபராதமோ, கொடுத்த பணத்தையோ டாஸ்மாக் வசூல் செய்யவில்லை.
மாறாக, தரமற்ற அந்த மது வகைகள், டாஸ்மாக் கடைகளில் இன்னும் விற்பனை செய்யப்படுவதோடு, இருப்புக்காக கூடுதல் மது பாட்டில்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை செய்தால், பல உண்மைகள் வெளியே வரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
